வானளாவிய கட்டிடங்களை கட்டி மலைக்க வைக்கும் துபாயில், தற்போது வியக்க வைக்கும் வகையில் உலகின் மிக உயரமான முறுக்கு கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
துபாய் மரினாவில் அமைந்துள்ள கேயான் டவர் என்ற இந்த அடுக்குமாடி குடியிருப்பு $US272 million ($A288.32 million) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் சாதாரண கட்டடம் போன்று ஆரம்பித்து, மேலே செல்லச்செல்ல முறுக்கு போன்று 90 டிகிரி கோணத்தில் திருப்பப்பட்டு, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 310 மீட்டர். இதில் மொத்தம் 75 தளங்கள் உள்ளன.
கேயான் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள இந்த குடியிருப்பில் உள்ள 80 சதவீத வீடுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டன. இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2006ல் தொடங்கியது.
ஆனால், தொழில்நுட்ப பிரச்சினைகள், 2009ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் பணிகள் மிகவும் தாமதம் ஆனது.
துபாயில் கடந்த 2010ம் ஆண்டு உலகில் மிகவும் உயர்ந்த கட்டிடமான பர்ஜ் கலிபா (828 மீட்டர் உயரம், 160 தளங்கள்) கட்டிடம் திறக்கப்பட்டது.
அதன்பின்னர் 2012ல், உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடம் பிரின்சஸ் டவர் (413.4 மீட்டர் உயரம்) கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
அதே ஆண்டு உலகின் மிக உயரமான ஓட்டல் அமைந்துள்ள ஜே.டபுள்யு. மாரியாட் மார்க்கிஸ் இரட்டைக் கோபுரம் (355 மீட்டர்) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.