Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | நஞ்சுண்ட வீரம் | தீபச்செல்வன்

கவிதை | நஞ்சுண்ட வீரம் | தீபச்செல்வன்

1 minutes read


ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில்
சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில்
நஞ்சை ஆயுதமாக்க
உயிரை வேலியாகினர் போராளிகள்

வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை
அலங்கரிக்கும் கனவு வீரர்களின்
கருணையான முகத்தை
அன்புறைந்த வார்த்தைகளை
சனங்களுக்காய் களமாடும் வீரத்தை
கடக்க முடியா நஞ்சு

தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின்
கனவுகளால் பச்சை நிறமானது நிலம்.

பொறிக்குள் எல்லா வகையான
தந்திரங்களையும் முறியடிக்க
நெடுநேரம் போராடினர்
சூழ்ச்சியால் அபாயமாக்கப்பட்ட
நஞ்சு வலயத்தில்
காற்றுக்குத் தவித்தனர் குழந்தைகள்

மரணத்தின் நிழல் வீசியது எங்கும்

பறவைகள் முட்களுக்குள் மாட்டுண்டதுபோல்
குழந்தைகள் கிடங்குகளில் விழுந்தது போல்
குட்டிமான்கள் பொறிக்குள் சிக்குண்டதுபோல்
நஞ்சுப் பொறியில் அகப்பட்டது நிலம்

உயிர்கள் எரிய
காடு துடித்தது.

கனவு நிரம்பிய விழிகளோடிருந்த குழந்தைகளுக்கு
நஞ்சை பருக்கையில்
அதை தாமருந்தினர் போராளிகள்

கனவு மிகுந்த புன்னகையில்
இலட்சியம் நிறைந்த பார்வையில்
விடுதலையின் பேராவாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட வீரத்தில்
சூழ்ச்சியால் வீசப்பட்ட நஞ்சு
நனைத்தது உடலை மாத்திரமே
0

2010

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More