Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்

கனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்

8 minutes read

அழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது. அதன் நடுவேயிருந்த நடைபாதையில் அப்பா அம்மாவின் கைகளைப் பிடித்தபடி துள்ளிக் குதித்து நடந்து கொண்டிருந்தேன்.
“செல்லக்குட்டி வீட்டுக்குப் போவோமா” அப்பா கேட்டார்.
“இல்லையப்பா. நான் விளையாடப் போறன். ஊஞ்சல் ஆடவேணும், சறுக்கி விளையாடவேணும் ஐஸ்கிரீமும் குடிக்கவேணும்” அப்பாவின் கையைப் பிடித்துக் கெஞ்சினேன்.
“இவ்வளவு ஆசையிருக்கா என்ர செல்லத்துக்கு. சரி வா”
மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஊஞ்சல்மரம். சறுக்குமரம், சுற்றும் ராட்டினம் என சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ப எல்லா விளையாட்டு உபகரணங்களும் இருந்தன. ஆசையோடு போய் ஊஞ்சலில் ஏறினேன். அப்பா பின்னாலிருந்து ஊஞ்சலை ஆட்ட அம்மா அருகில் நின்று கைகளைத்தட்டி எண்ணிக் கொண்டிருந்தாள். எனக்கு சந்தோஷமாயிருந்தது.

“ஒவ்வொரு நாளும் வந்து விளையாடவேணுமப்பா. நாளைக்கும் வருவமா” ஆசையோடு கேட்டுக்கொண்டிருந்த நேரம் யாரோ என்னை உலுக்குவது போலிருந்தது. கூடவே அம்மாவின் குரலும் கேட்டது.
“சாயா, எழும்படா ஏழு மணியாச்சு. ஸ்கூலுக்கு நேரமாகுது”
கண்களைத் திறந்து பார்க்க கட்டிலில் படுத்திருந்தேன். அம்மா எதிரே நின்றிருந்தாள். அப்பா எங்கே… கண்களால் தேடினேன் காணவில்லை. வழமை போல் ஆறுமணிக்கே எழுந்து வேலைக்குப் போய் விட்டார். திரும்பி வர ஏழுமணியாகி விடும். ஆறு நாளும் வேலைக்குப் போவார். ஞாயிறு மட்டும்தான் வீட்டிலிருப்பார். அன்று அப்பாவை விட்டு விலகமாட்டேன். எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று அடம்பிடிப்பேன். எனக்கு பிடித்த கடற்கரை, பூங்காவிற்கு கூட்டிப்போவார். சேர்ந்து விளையாடி நீச்சலடித்து விரும்பியதைச் சாப்பிட்டு திரும்புவோம். அந்த நேரங்கள் அடிக்கடி வராதா என்று ஏங்குவேன்.

லண்டனில் குளிர் தொடங்கிவிட்டது. இனி விளையாட ஒரு இடமும் போகமுடியாது. குளிராய் இருந்தாலும் குளிர் தாங்கும் உடுப்புகளைப் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்குப் போகவேண்டும். காலையில் அம்மாதான் என்னை ஸ்கூலில் இறக்கி விட்டு வேலைக்குப் போவாள். ஸ்கூல் முடியும் நேரம் தன் வேலையை முடித்துக்கொண்டு வந்து எனக்காக காத்திருப்பாள். அப்பாவும் வரவேணும் என்று ஆசைப்படுவேன்.
“அப்பா எப்ப வருவாரம்மா” வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஒவ்வொரு நாளும் மறக்காமல் கேட்பேன்.
“ குளிச்சு சாப்பிட்டு ஸ்கூல் கோம்வேக் செய்து முடிய வந்திடுவார். பிறகு அப்பாவோட விளையாடலாம்” அம்மாவும் சளைக்காமல் பதில் சொல்லுவாள்.
என் வேலைகளை முடித்துவிட்டு அப்பாவுக்காக காத்திருப்பேன். அவருக்கும் தெரியும். இரவு படுக்கப் போகும்வரை என்னோடிருந்து விளையாடி கதை சொல்லுவார். தூக்கி வைத்திருந்து கொஞ்சுவார்.
“ஆறு வயசாச்சு. தூக்கி வைச்சு கொஞ்சுறீங்கள்” அம்மா சொல்லிச் சிரிப்பாள்.
“எத்தனை வயசானாலும் சாயா எனக்கு சின்னக்குட்டிதானே. அவளை மடியில வைச்சுக் கொஞ்சுவன்” சொல்லிக்கொண்டே என்னை இறுக அணைத்துக் கொஞ்சுவார். இதையெல்லாம் நினைத்து நினைத்து சந்தோஷப்படுவேன்.

அன்று சனிக்கிழமை லீவு நாள். ஆறுதலாக எழும்பலாம். கண் விழிக்கும்போது அப்பாவின் குரல் கேட்டது. அப்பா வேலைக்குப் போகவில்லையா…. என் அறையை விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் சோபாவிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். இன்று எனக்கு கொண்டாட்டம்தான்.
“அப்பா இண்டைக்கு வெளியில போவம் எங்க கூட்டிக்கொண்டு போகப்போறீங்கள்” ஆசையோடு கேட்டேன்.
“இந்த குளிருக்க எங்க போறதடா. வீட்டில இருந்து விளையாடுவம். இப்ப நடக்கிறதைப் பார்க்க வெளிய போகேலாமல் எல்லாரும் வீட்டுக்குள்ள இருக்கவேண்டி வரப்போகுது. அதுக்கு முதல் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வைக்கவேணும்” என்றார்.
“நானும் வரப்போறனப்பா”
“வேண்டாமடா. இனி தேவையில்லாமல் ஒரிடமும் போகக் கூடாது. நீ அம்மாவோட இரு நான் மட்டும் போய் வாங்கி வாறன்”
அப்பா வழக்கமாக வாங்குவதை விட அதிகமாகவே வாங்கி வந்திருந்தார்.
“பின்னேரம் நீ போய் சமையலுக்கு தேவையானதை வாங்கிவா” என்று அம்மாவிடம் சொன்னார்.
அம்மாவும் போகும்போது என்னைக் கூட்டிக்கொண்டு போகவில்லை. தான் மட்டும் போய் நிறைய வாங்கி வந்தாள். இது போதுமா இன்னும் வாங்க வேண்டுமா என்று கேட்டபடியே எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி வைத்தாள். அதில் எனக்கு வேண்டியவைதான் அதிகமாக இருந்தது. அம்மா எப்பொழுதும் அளவாகத்தான் வாங்குவாள். தேவையானபோது வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும் அம்மா நிறைய வாங்கிய பின்பும் இன்னும் வாங்க வேண்டும் என்று சொன்னது ஏனென்று தெரியவில்லை.

தொலைக்காட்சி செய்திகளை அடிக்கடி கேட்டு கிருமி, நோய், சாவு என்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். வழமைபோல் நாட்கள் போய்க் கொண்டிருந்தாலும் அதில் ஒரு பரபரப்பு இருந்தது. திடீரென்று ஸ்கூல் லீவு என்றார்கள்.
“நானும் லீவு எடுக்கப்போறன். வேலைக்குப் போறதை நினைக்கவே பயமாயிருக்கு. சாயாவோட இருக்கவேணுமே” என்றாள் அம்மா.
அப்பா வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். அவர் வேலையால் வரும் போது அம்மா என்னை அறையில் இருக்கவிட்டு அப்பா குளித்துவிட்டு வந்தபின்தான் கதவைத் திறப்பாள். ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டிலிருந்து விளையாடும்போது அப்பாவும் வேலைக்குப் போகாமலிருந்தால் எவ்வளவு நேரம் விளையாடலாம் என்று நினைப்பேன். இரண்டு கிழமையில் அப்பாவும் வீட்டில் நின்றுவிட்டார்.
“வர வர நோயும் சாவும் கூடிக்கொண்டு வருகுது. வேலை செய்யிற இடத்திலையும் ஒருத்தனுக்கு வந்துட்டுது. எங்களை வீட்டிலயிருந்து வேலையை செய்யச் சொல்லி விட்டிட்டாங்கள்” அப்பா சொன்னார்.
“ஐயோ….உங்களுக்கு பயமில்லையே”
“அவன் வேற பிரிவில வேலை செய்கிறான். நான் அவனைச் சந்திக்கிறதில்லை”
அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது நானும் அவர்களுடன் இருந்து படிப்பேன் படங்கள் கீறுவேன். கீறிய படங்களை உடனே அவர்களுக்கு காட்டி அவர்களின் பாராட்டை எதிர்பார்ப்பேன்.
“வேலை செய்யிற நேரம் குழப்பக்கூடாது. கீறி வை. வேலை முடிய வந்து பார்க்கிறன்” அப்பா சொன்னதும் எனக்கு அழுகை வந்துவிட்டது.
“செல்லம் குடுத்து தூக்கி வைச்சு கொஞ்சுவீங்கள். பிறகு இப்பிடிச் சொன்னால் தாங்குவாளே. நீங்களே போய் சமாதானப் படுத்துங்கோ”
“என்ர குட்டி கீறினதைப் பார்ப்பம். சூப்பராய் கீறியிருக்கிறாய் கெட்டிக்காரி” அப்பா கொஞ்சிப் பாராட்டியதும் அழுகை போன இடம் தெரியவில்லை.
பாட்டுப் போட்டு அப்பாவோடு ஆடுவது எனக்கு பிடிக்கும்.
“அப்பா டான்ஸ் கிளாஸுக்கு போகப் போறன்”
“போகலாம். உனக்கு என்ன ஆசையோ எல்லாம் செய்யலாம். படிக்க வேணும். படிக்காவிட்டால் அப்பாவுக்கு கோவம் வரும்”
அப்பா கோபமாய் பார்த்தாலே தாங்கமாட்டேன். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன்.
“இவள் அப்பான்ர செல்லம்”
என்று அம்மா மற்றவர்களிடம் சொல்லும் போது எனக்கு பெருமையாகயிருக்கும்.

கொஞ்சநாளாய் அப்பா தனக்கு வேலை அதிகம் என்று அறையிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தார். என்னுடைய அறையிலிருந்து என்னைப் படிக்கச் சொன்னார். அம்மாவோடு விளையாடச் சொன்னார். அவர்கள் இருவரின் முகங்களிலும் கவலை தெரிந்தது.
“என்னோட விளையாட வராமல் அப்பா அறைக்குள்ளேயே இருக்கிறாரம்மா” அம்மாவிடம் சொல்லும்போது அழுகை வந்தது.
“வேலை முடிய வருவார்தானே. அடம்பிடிக்காமல் இருந்து விளையாடு ” சொன்ன அம்மாவின் முகத்தில் சிரிப்பில்லை.
அம்மா சொன்னபடி கேட்காவிட்டால் அடிவிழும் என்ற பயத்தில் பேசாமல் இருந்தேன். அப்பாவோடு விளையாட மனம் தவித்துக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் அப்பா காய்ச்சல் என்று படுத்திருந்தார். அறைக் கதவு பூட்டியபடியிருந்தது. அம்மா மட்டும் முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு உள்ளே போய் வந்தாள்.
“நானும் அப்பாவைப் பார்க்கப் போறன்” அழுது அடம்பிடித்தும் அம்மா என்னை அறைக்குள் விடவில்லை.
இரவு அம்மா என்னோடு வந்து படுத்தாள். அம்மா வந்து படுத்தது சந்தோஷமாயிருந்தாலும் அப்பா தனிய படுக்கிறாரே என்று கவலையாகயிருந்தது.
“எனக்கு காய்ச்சல் வந்தால் அப்பாவோடதானே படுப்பன். இப்ப அப்பாவுக்கு காய்ச்சல். நான் அப்பாவோட படுக்கப்போறன். பாவம் அப்பா தனிய படுக்கிறாரம்மா”
“பேசாமல் படு. அங்க வரவேண்டாம் எண்டு அப்பாதான் சொன்னவர்” அம்மா சொன்னதைக் கேட்டதும் கோபத்துடன் திரும்பிப் படுத்தேன்.
இரவு அப்பாவின் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அம்மா எழுந்து போக நானும் எழுந்து ஓடினேன். அப்பா மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அம்மா அழ நானும் அழுதேன். அம்மா என்னை இழுத்து வந்து அறைக்குள் விட்டு கதவைப் பூட்டிவிட்டுப் போனாள். சிறிது நேரத்தில் கதவைத் திறந்து உள்ளே வந்து என் அருகில் படுத்து என்னை அணைத்துக் கொண்டாள்.
விடிய எழுந்தபோது அப்பாவை காணவில்லை.
“அப்பா எங்கையம்மா”
“காய்ச்சல் எண்டு கொஸ்பிற்றலுக்குப் போயிட்டார். மாறினதும் வந்திடுவார்” அழுது கொண்டே சொன்ன அம்மாவைப் பார்க்க எனக்கும் அழுகை வந்தது.

நாட்கள் போய்க் கொண்டிருந்தது அப்பா வரவில்லை. சொந்தக்காரர் எல்லோரும் போன் எடுத்து அப்பாவைப் பற்றி கேட்டார்கள். யாரும் வீட்டுக்கு வரவில்லை. அம்மா எந்தநேரமும் அழுதபடி சாமியைக் கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.
“அப்பா எப்ப வருவார். புதுசு புதுசாய் எத்தனை விளையாட்டு அப்பா சொல்லித் தந்திருக்கிறார். தனிய இருந்து நான் மட்டும் எப்பிடி விளையாடுறது” சிணுங்கினேன்.
“வருத்தம் மாறி அப்பா வரட்டும். நான் வாறன் விளையாட”
விளையாட வாங்கோ என்று கேட்டால் சமைக்கவேணும், வீடு துப்பரவாக்கவேணும் இப்ப நேரமில்லை அப்பாவோட விளையாடு என்று சொல்லும் அம்மா என்னோடிருந்து விளையாடினாள். இரவில் கதைகள் சொன்னாள். ஆனால் அம்மாவின் முகத்தில் சந்தோஷமில்லை. அழுதது போல் எந்தநேரமும் கண்கள் வீங்கியிருந்தது.
“அப்பா போய் எவ்வளவு நாளாச்சும்மா பத்து நாளாச்சா” கைகள் இரண்டையும் விரித்துக் காட்டி கேட்டேன்.
“இண்டையோட இருபத்தைஞ்சு நாளாச்சுடா. இன்னும் வருத்தம் மாறேலையே”
“அப்பாவை பார்க்கப் போறன். எனக்கு அப்பா வேணும் கூட்டிக்கொண்டு போங்கோ” அழுதேன்.
“அப்பாவை ஒருத்தருமே பார்க்கேலாது உள்ள விடமாட்டினம். விட்டால் உன்னைக் கூட்டிக்கொண்டு போறன்” அம்மா என்ன சமாதானம் சொன்னாலும் அப்பாவை நினைக்க அழுகை வந்து கொண்டேயிருந்தது.

அதேநேரம் போன் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போய் அம்மா போனை எடுத்தாள். யாரோ கதைத்தார்கள். அடுத்த நிமிடம்
“ஐயோ கடவுளே…” என்ற அம்மாவின் அலறல் கேட்டது. பயந்து நடுங்கி விட்டேன். அம்மா பெரிய குரலில் அழுததை இதுவரை நான் பார்த்ததேயில்லை. ஓடிப்போய் அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு நானும் அழுதேன். போனை எறிந்துவிட்டு இரு கைகளாலும் என்னை கட்டிக் கொண்டு கதறினாள்.
“ஏனம்மா அழுகிறீங்கள். எனக்கு பயமாயிருக்கு. அப்பாவைக் கூப்பிடுங்கோ” அழுதுகொண்டே சொன்னேன்.
“உனக்கு எப்பிடிச் சொல்லுவன். இனி அப்பா இல்லையெண்டு எப்பிடிச் சொல்லுவன்” தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
நான் இருக்குமட்டும் நீங்கள் கவலைப்படவோ அழவோ கூடாது என்று சொல்லும் அப்பா எங்களை அழவிட்டு எங்கே போனார். இருந்த இடத்தைவிட்டு அம்மா எழும்பவில்லை அழுது கொண்டேயிருந்தாள். எனக்கு பசித்தது. பசியில்லாவிட்டாலும் நேரத்திற்கு சாப்பிடு என்று சொல்லி சாப்பிட வைக்கும் அம்மா அந்த நினைவேயில்லாமல் அழுது கொண்டேயிருந்தாள்.
“எனக்கு பசிக்குதம்மா”
நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு இன்னும் பெரிதாக அழுதாள். பசிக்குது என்றுதானே கேட்டேன் அதற்கு ஏன் அம்மா அழுகிறாள். திரும்பவும் கேட்கப் பயந்து அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தின்பின் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குள் போய் சாப்பாட்டை எடுத்து வந்து தந்தாள்.
“உங்களுக்கு”
“எனக்கு பசிக்கேல நீ சாப்பிடு” நான் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டதும் அம்மாவின் மடியில் படுத்தேன். அம்மா அழாமல் என்னைத் தட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு நித்திரை வந்தது.
திடீரென அமைதியைக் குலைத்துக் கொண்டு போன் அலறியது. திடுக்கிட்டு எழுந்தேன்.
போன் எடுத்த அம்மா திரும்பவும் அழத்தொடங்கினாள்.
“ஐயோ நான் என்ன செய்ய. அப்பா எங்கே எண்டு கேக்கிறாளே என்ன பதில சொல்ல. இவளோட எப்பிடி சமாளிக்கப் போறன்” சொல்லிச் சொல்லி அழுதாள். அழுகை சிறிது குறைய கண்களைத் துடைத்துக் கொண்டு என் அருகில் வந்து படுத்தாள். அம்மாவை படுக்க விடாமல் மீண்டும் மீண்டும் போன் மணியடித்து யார் யாரோ கதைத்தார்கள். அழுது ஓய்ந்திருந்த அம்மா ஒவ்வொரு முறையும் கதைக்கும் போது பெரிய குரலில் கத்தியழுதாள். என்னால் தாங்கமுடியவில்லை. போனை எடுத்து உடைக்கவேணும் போலிருந்தது.
“நீங்கள் போனும் எடுக்கவேண்டாம் அழவும் வேண்டாம் அப்பா வரட்டும் உங்களை எல்லாரும் அழவைக்கினம் எண்டு சொல்லுவன்”
அப்பாவைப் பற்றிக் கேட்டாலே அம்மா அழுதாள். மாமா வந்திருந்தார். வேண்டாம் என்று அம்மா மறுத்தும் விடாமல் அம்மாவை சாப்பிடவைத்தார்.
“அப்பா எப்ப வருவார் மாமா. அம்மா அழ பயமாயிருக்கு”
“பயப்பிடாத நான் உங்களோடயிருக்கிறன்” என்றார் மாமா
“வேண்டாமடா உனக்கு பயம் நீ போ” அம்மா சொல்ல
“போகவேண்டாம் மாமா நில்லுங்கோ” என்றேன்.

ஒரு கிழமையாகிவிட்டது. அம்மாவின் அழுகையும் நிற்கவில்லை அப்பாவும் வரவில்லை.
அன்று மாமா அம்மாவையும் என்னையும் அழைத்துக்கொண்டு காரில் போனார்.
“அப்பாவைப் பார்க்க போறமா” மாமா தலையை ஆட்டினார்.
எனக்கு சந்தோஷமாயிருந்தது.
ஒரு வீட்டின் முன்னே கார் நிற்க இறங்கி உள்ளே போனோம். அறையின் நடுவில் மூடியபடி ஒரு பெட்டியிருந்தது. அதைச்சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். அனைவருடைய முகங்களிலும் மாஸ்க் இருந்தது. அவர்களில் அப்பாவைத் தேடினேன் காணவில்லை. அம்மா பெட்டிக்கருகில் போய் நின்று அழத்தொடங்கினாள். அம்மா அழுவதைப் பார்த்து அங்குள்ளவர்களும் அழுதார்கள். எனக்கும் அழுகை வந்தது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அப்பாவைத் தேடி அழுது கொண்டிருந்தேன். என்னன்னவோ செய்தார்கள். கடைசியில் பெட்டியைத் தூக்கும்போது தூக்கவிடாமல் இருகைகளாலும் மறித்துக் கொண்டு கதறிக் கதறி அழுத அம்மாவைப் பார்த்து நானும் அழுததில் விக்கல் வந்துவிட்டது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு போனபின்பும் அம்மா அழுது கொண்டிருந்தாள். பொறுமை இழந்து
“ஏனம்மா அப்பா இன்னும் வரேல. எப்ப வருவார்” விக்கிக் கொண்டே கேட்டேன்.
“அப்பா போயிட்டாரடி இனி வரமாட்டார் வரவே மாட்டார்” அம்மா படாரென என் பக்கம் திரும்பிச் சொல்ல அதிர்ச்சியில் விக்கல் கூட நின்றுவிட்டது.
திரும்பவும் மாமா எங்களைக் கொண்டு வந்து வீட்டில் விட்டு போய் திரும்பவும் வந்தார்.
“அக்கா, இந்தா அத்தானின் படம்” பேப்பரால் சுற்றிய பார்சலை அம்மாவிடம் கொடுத்தார். அம்மா அதை சுவாமித்தட்டில் வைத்து விட்டு வந்தாள். என் கையைப் பிடித்து அழைத்துப்போய் படுக்க வைத்து தானும் படுத்தாள்.
அப்பா வரமாட்டாரா…என்னைப் பார்க்க வரமாட்டாரா… ஏன்..ஏன்.. அப்பாவை நினைத்தபடி படுத்திருந்தேன்.

அழகான பூந்தோட்டம். அதில் நிறைய பூக்கள் பூத்திருந்தன. நடுவேயுள்ள நடைபாதையில் அம்மாவின் கையைப் பிடித்து கொண்டு நடந்துகொண்டிருந்தேன். மறுபக்கம் அப்பாவின் கையைத் தேடினேன் காணவில்லை.
“அப்பா எங்கேயம்மா ஊஞ்சல் ஆடவேணும். ஐஸ்கிரீமும் குடிக்கவேணும்” கேட்டேன்
“வாடா நான் வாங்கித் தாறன்.”
“எனக்கு ஒண்டும் வேண்டாம் எனக்கு அப்பாதான் வேணும்” அழுதபடி ஊஞ்சல் பக்கம் ஓடினேன். அப்பாவை எங்கு தேடியும் காணவில்லை.
“அப்பா..அப்பா எங்கயிருக்கிறீங்கள் வாங்கோப்பா” கத்திக் கூப்பிக் கொண்டே திடுக்கிட்டு கண்விழித்தேன். கட்டிலில் படுத்திருந்தேன். அப்பாவைக் காணவில்லை. வேலைக்குப் போய்விட்டாரோ… சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள்.
நிமிர்ந்து பார்த்தேன். எதிர் சுவரில் புதிதாக மாட்டியிருந்த படத்தில் அப்பா மாலையோடு எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

நிறைவு..

– விமல் பரம்

நன்றி – காற்றுவெளி மின்னிதழ் (ஆடி 2020)


சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More