வீரகேசரி
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
இனவாத அரசியலைத் தொடர்ந்து செய்தால் நாடு பின்னோக்கிச் செல்லும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் இனவாதத்தை விட்டு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கு மாகாண சபையின் சுதந்திரச் செயற்பாடுகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும், பலமான பெரும்பான்மையை மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏன் வழங்கியுள்ளனர் என அரசு சிந்திக்க வேண்டும். அதனைச் சிந்தித்து வடக்கின் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை அரசு வழங்க வேண்டியது தமது கடப்பாடு என அரசு எண்ணிச் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.
நல்லாட்சிக்கு ஒன்றிணையுங்கள் – ஆயர்கள் கோரிக்கை:
சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் இடமளியாது த.தே.கூ வடபகுதியில் நல்லாட்சியை அமைக்க ஒன்றிணைய வேண்டும் என வடக்கு கிழக்கு ஆயர்களும் சிவில் சமூகமும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ் வேண்டுகோளை விட வேண்டிய தேவை ஏன்? எழுந்துள்ளது எனில் முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் அமைச்சர்களின் நியமனம் தொடர்பாகத் தற்போது வரை கூட்டமைப்புக்ககுள் நிலவும் சர்ச்சைகளே எனத் தெரிகின்றது.
மோதலில் முடிந்த ஆதரவு மற்றும் எதிர் ஆர்ப்பாட்டங்கள்:
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்க ஆதரவாகவும் எதிராகவும் நடாத்தப்பட்ட இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் எதிர்பாராத விதமாகச் சந்தித்த வேளையில் மோதலுடன் முடிவுக்கு வந்துள்ளன.மாத்தறைப் பகுதியில் நடந்த இந்தக் கலவரத்தால் அப் பிரதேசமே பதட்டத்துக்குள்ளாகியதுடன் துப்பாக்கி வேட்டுக்களும் தரப்பினரிடையே தீர்க்கப்பட்டுள்ளன. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் தென்மாகாண சபை உறுப்பினர் காயமடைந்துள்ளதுடன் மெலும் ஒன்பது பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியப் பங்கேற்பிற்கு எதிராகக் கையெழுத்து வேட்டை :
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்தைத் திரட்டும் பணியை தமிழ்நாட்டின் கழகம் ஒன்ற ஆரம்பித்துள்ளது. இதனை திராவிடர் விடுதலைக் கழகம் ஆரம்பித்துள்ளது.
சனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமானம் – பொதுபலசேனா வரவேற்பு:
வடக்கின் முதலமைச்சரான சி.வி விக்னேஸ்வரன் தனது பதிவிப் பிரமானத்தை சனாதிபதியின் முன்னிலையில் நிகழ்த்த இருப்பதைப் பொது பல சேனா வரவெற்றுள்ளது.பிரிவினை வாதத்தைத் தோற்று விக்காமல் த.தே.கூ வின் இந் நடவடிக்கை வரவேற்கத் தக்கது என பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கவிழ்ந்தது படகு – நால்வர் பலி:
மன்னார்க் கடற்பரப்பில் பயணித்த படகொன்று கவிழ்ந்ததால் அப் படகில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர். அத்துடன் குழந்தையொன்று காணாமற் போயுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இவ் விபத்து நடந்துள்ளதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், மீட்புக்குழுவினரால் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
பிரபாகரனின் வீடல்ல பதுங்குகுழியே தகர்ந்தது:
புதுக்குடியிருப்புப் பகுதியில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது பதுங்குழி ஒன்றே தவிர பிரபாகரன் இருந்ததாகக் கருதப்படும் வீடல்ல என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து இவ்வாறு பதுங்குகுழிகள் தகர்க்கப்பட்டு வருவதாகவும் இப் பதுங்குகுழியைத் தகர்க்க முடியாமல் இருந்ததற்குக் காரணம் அதனைச் சுற்றி விதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளே என்றும், தற்போது கண்ணி வெடிகள் முற்றுமுழுதாக அவ்விடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால் இப் பதுங்குகுழி தகர்க்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)