வீரகேசரி:
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
வடமாகாணசபையின் சீரான இயக்கத்திற்கு பொறுப்புக் கூறுதலும் வெளிப்படைத்தன்மையும் இன்றியமையாதவை என வடமாகாணசபையின் முதல்வர் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் திணைக்களங்களின் அதிகாரிகளையும் செயலாளர்களையும் சந்தித்துப் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாகத் தான் அவதானித்து வரும் நிர்வாக முறையின் நிலை ஓர் ஆண்டான் அடிமைச் சமூக நிர்வாக முறையாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் நிர்வாகிகள் தாம் நினைத்ததைச் செய்பவர்களாகச் செயற்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் சேவகர்களாகி நாங்கள் கீழிருந்து இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருப்பதானது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராத நிலை காணப்படுமாயின் வடமாகாண சபையின் சீரான நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகும் என்பதையே தனது பேச்சில் கோடிட்டுள்ளார்.
மேல்மாகாணத்தில் தனித்துப் போட்டி:
சிறுபான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து சிறுபான்மைக் கட்சிகள் மேல்மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. கடந்த முறை பிரதான கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இம் முறை தனித்தனியாகவே போட்டியிடுகின்றன.
பாரம்பரியத்தைத் தொலைக்க வைத்த நாம் அதனை மீண்டும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்:
எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி என்று அதனைக் கட்டுப்பாட்டுடன் விருப்பு வெறுப்பின்றி, நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். நல்வாழ்க்கை என்பது எங்கோ மேகங்களுக்கு அப்பால் இருந்து கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல. அதனை நாம் இவ்வுலக வாழ்க்கையிலேயே பெறலாம். அதற்கேற்ப நாம் தொலைத்த பாரம்பரியத்தை மாணவர்களுக்கு விதந்துரைக்க வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீனவர் பேச்சுக்கள் 27 வரை ஒத்தி வைப்பு:
இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கிடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதும் கைது செய்வதும் சனநாயகத்தை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனந்தியை அச்சுறுத்துவதை விடுத்து சரணடைந்து காணமற்போயுள்ள அவரது கணவர் உட்பட அனைவருக்கும் நிகழ்ந்தது என்ன என்பதைத் தேடியறியும் நடவடிக்கையில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
முள்ளந்தண்டுப் பாதிப்புக்கானவர்களுக்கு வவுனியாவில் மருத்துவமனை…
முள்ளந்தண்டுப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையொன்று வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இவ்வைத்தியசாலையை வடமாகாண முதல்வர் திறந்து வைத்துள்ளார். சுமார் 20 பேருக்கு வைத்திய வசதியளிக்கக்கூடிய இவ்வைத்தியசாலை பம்பைமடு பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விசா விதிகளை மீறாதீர்கள் – அவுஸ்திரேலிய அரசு:
இலங்கைக்கு வருகை தரும் ஆஸி மக்கள் இலங்கையின் விசா ஒழுங்குகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என ஆஸி அரசு எச்சரித்துள்ளது. அத்துடன் இலங்கையில் டெங்கு பரவும் நிலை தொடர்பாகவும் கவனத்துடன் செயற்படுமாறு தனது மக்களை அந்நாடு எச்சரித்துள்ளது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)