வீரகேசரி :
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
பன்முக அடையாளத்தை இழந்து இலங்கை பெரும்பான்மை அணுகுமுறையைத் தனதாக்கிக் கொண்டதாலேயே இன்றுவரை பிரச்சனைகள் விஸ்வரூபமாகக் கிளம்பக் காரணமாகியுள்ளது என வடக்கின் முதல்வர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினப் புத்திஜீவிகள் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வரல் வேண்டும். அதன் ஊடாக நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை ஒரு இன, மத, மொழி பேசும் மக்களின் அடையாளமாகக் கொள்ளாது விட்டு அனைத்து இனங்களுக்கும் அவ்வுணர்வை ஊட்டக் கூடியதாக முன்வரல் வேண்டும். தேசத்தைப் பிரச்சனையில் ஆழ்த்திய அரசியல்வாதிகளின் பின்னால் புத்திஜீவிகளும் அணி திரண்டால் பிரச்சனை என்றுமே தீரப் போவதில்லை. ஊடகங்களும் புத்திஜீவிகளும், கல்விமான்களும் இனங்களுக்கிடையிலான உறவை மனிதாபிமானத்தை முன்நிறுத்தி விருத்திசெய்ய முன்வரவேண்டும்.
தலையாட்டியை ஆயுத முனையில் வைத்து பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள்:
1997ம் ஆண்டில் தென்மராட்சியில் நடைபெற்ற சுற்றி வளைப்பின் போது ஆயதமுனையில் தலையாட்டியை வைத்து எமது பிள்ளைகளை இராணுவமே கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை என வடக்கில் நிலைகொண்டுள்ள காணாமற் போனரைப் பற்றிய விசாரணைகளில் ஈடுபட்டுவரும் ஆணைக்குழுவின் முன் சாவகச்சேரியில் மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
ஜெனீவாவில் தீர்மானம் கடுமையாக அமையும்:
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் இலங்கைக்குக் கடுமையானதாகவே அமையும். ஆனாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொறிமுறையை அமுலாக்குவதற்கு அரசு தயாராகவே உள்ளது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை”:
இறுதிப்போர் நடைபெற்ற போது முள்ளிவாய்க்காலில் எனது பிள்ளைக்குக் கஞ்சி வாங்குவதற்காக அலைந்து விட்டு கஞ்சியுடன் நான் திரும்பி வந்தேன். ஆனால் எனது குழந்தையைக் காணவில்லை, அன்றிலிருந்து இன்று வரை எனது குழந்தையை நான் தேடிக்கொண்டே இருக்கின்றேன் என தாயொருவர் கதறிக் கண்ணீர் மல்கி தனது வாக்குமூலத்தைப் பதிந்துள்ளார்.
பிச்சை எடுத்துப் பிரதேச அபிவிருத்தியில் ஈடுபடமாட்டேன். – சம்பந்தர்:
அரசிடம் பிச்சை எடுத்து எமது பிரதேச அபிவிருத்தியில் ஈடுபட வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. மிக விரைவில் தமிழர்களுக்கு உரிய தீர்வொன்று கிடைக்கும். அதன் பின்னர் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தம்பலகாமம் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
தேரர்கள் யானைகள் சகிதம் ஆர்ப்பாட்டம்:
அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் திரண்ட தேரர்கள் யானைகள் சகிதம் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைப் பிரதானமாகக் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் அரங்கேறியுள்ளது.
சாட்சியம் அளிப்பதால் நாமும் காணாமற் போகலாம் -மக்கள்:
ஆணைக்குழுக்களின் முன் சாட்சியம் அளிப்பதால் தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்குச் சாட்சியம் அளிக்க வந்த மக்களே இக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)