யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம். ஆனால் தெய்வங்களின் இருப்பிடத்தில் அது சாத்தியமாகாது. அறியாமல் செய்த பாவத்தை விட அறிந்து செய்த பாவங்கள் மேலும் மேலும் அவனை துன்புறுத்தும்.. யாருக்கு தெரிய போகிறது என்று செய்யும் அனைத்து பாவங்களுக்கும் சாட்சியாக சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் என்கிறது மனு தரம சாஸ்திரம்.
பாவம் செய்தால் என்ன.. பரிகாரம் செய்துவிடலாம் என்ற எண்ணங்கள் கூட தவறுதான். அறியாமல் செய்த பாவங்கள் உரிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி ஆவதற்கு கூட இறைவனது அருள் வேண்டும். ஆனால் தர்மவாழ்விலிருந்து விலகி அநீதியை செய்யும் போது அதற்கு பரிகாரமும் கிடையாது. இறைவனிடம் மன்னிப்பும் கிடையாது.
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருக்கலாம். இதில் தெரிந்து செய்யும் பாவங்களுக்கு தண்டனை உண்டு என்பது நமக்கு பல புராணங்கள் எடுத்துக் கூறுகிறது. இருந்தாலும் அதை பற்றிய அக்கறை நாம் கொள்வதில்லை. உண்மையில் பாவம் செய்தவர்களுக்கு இந்த கலியுகத்தில் உடனுக்குடன் தண்டனை கிடைப்பதை அனுபவ பூர்வமாக பலரும் உணர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் எல்லாம் சக மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை. தனக்கு என்னவோ ஒரு கொம்பு முளைத்தது போல் அலட்டிக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனை தரக்குறைவாக நடத்தும் இன்னொரு மனிதன் இறுதியில் மோட்சம் பெறுவதில்லை. அதே தவறை அவன் செய்தால் நல்ல படியாகவும், அடுத்தவன் செய்தால் அவனை தீய சொற்களால் வஞ்சிப்பதும் வாடிக்கையாக வைத்திருப்பான். ஆணவமும், திமிரும் கொண்ட இது போன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்பது தான் உண்மை.
பிறர் பொருட்களின் மீதும், உறவுகளின் மீதும் விருப்பம் கொள்கிறவன் நரகத்தில் இடமில்லாமல் நாயாய், பேயாய் அலைவான் என்பது தெய்வ சட்டத்தில் எழுதப்பட்டது. ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவோ பாடுபடுகிறார்கள். அதை சுலபமாக பறித்து செல்பவர்கள் எந்த காரணத்தை கூறினாலும் அது மிகப்பெரிய பாவமாக கூறப்படுகிறது. சிலர் வறுமையின் காரணமாக அடுத்தவர்களுடைய நகையை அறுத்துக் கொண்டு போவார்கள். இது இன்று பரவலாக நடைபெற்று வரும் சமூகக் குற்றமாக இருந்து வருகிறது.
அவர்களின் உயிர்மேல் கூட பரிதாபம் பார்க்காமல் நகைக்காக திருட துணிகிறார்கள். கேட்டால் வறுமை என்ற போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். அதுபோல் பிறருடைய மனைவி மேல் அல்லது கணவன் மேல் ஆசைப்படுபவர்களும் பெருகி வருகிறார்கள். இவைகள் கலியுகத்தில் நடக்கும் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலரும் கணித்துள்ளனர் என்பது தான் வியப்பிற்குரியது. இப்படியானவர்களுக்கு மோட்சம் என்பதே கிடையாதாம்.
மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுத்து பல துன்பங்களை தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்து வருவார்கள். வாழும் காலத்தில் இல்லாத பாவம் எல்லாம் செய்துவிட்டு, வாழ்நாளின் இறுதி காலகட்டத்தில் கடவுளே! என்று கடவுளை சரணாகதி அடைபவர்களுக்கு மோட்சம் என்பது கிடையாது. பாவம் எல்லாம் செய்து விட்டு இறுதியாக புண்ணியத்தை தேடுபவர்கள் பாவத்தை செய்பவர்களை காட்டிலும் மிகவும் மோசமானவர்கள் என்று தெய்வ சட்டம் கூறுகிறது.
பாவத்தை செய்வதை விட செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கூட தேடாமல், புண்ணியம் கிடைத்தால் போதும் என்று இறைவனை நம்புபவர்கள் இறுதியில் இறைவனால் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிற உண்மையை அறியாதவர்கள். ஆக இந்த மூன்று பாவங்களை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்காது. மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து படாதபாடு படுவார்கள். எனவே வாழும் காலத்திலேயே மற்றவர்களை மதிப்புடன் நடத்தி, நீங்களும் மரியாதையுடன் வாழ்வதற்கான வழியை பாருங்கள்
