இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்செர், அவுஸ்ரேலியாவில் நடைபெறும் நடப்பு ஆண்டு பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொவிட்-19 பாதுகாப்பு வளையம் தரும் நெருக்கடியால் பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில் விளையாடாமல் போகலாம் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது மிகவும் சவாலானது. 16 வாரங்களாக கொவிட்-19 பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளோம் என நினைக்கிறேன். இனிமேல் வீட்டுக்குச் செல்வது அரிதாகவே இருக்கும். இந்த வாழ்க்கைமுறை தான் இனி தொடரும் போல. இதற்காக நாம் பழகிக்கொள்ள வேண்டும். இந்த வருடம் இனிமேலும் எத்தனை பாதுகாப்பு வளையத்துக்குள் நான் வாழ வேண்டும் எனத் தெரியவில்லை.
கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. இப்போது செப்டம்பர் ஆகிவிட்டது. ஐபிஎல்லுக்காக ஒக்டோபர் மாதம் வரை இருக்கவேண்டும். நவம்பரில் நாங்கள் தென்னாபிரிக்காவுக்குச் செல்கிறோம்.
டிசம்பரில் மட்டும் சில வாரங்கள் எனக்கு ஓய்வு கிடைக்கும். பிக் பேஷ்; போட்டியில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்.
ஆனால் என் குடும்பத்தினரிடம் நான் நேரத்தைச் செலவிட வேண்டும். அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவிலோ ஐக்கிய அரபு அமீரகத்திலோ விளையாட வேண்டும். எனவே இந்த வருட பிக் பேஷ் ரி-20 தொடரில் நான் விளையாடாமல் போகலாம்’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் ஜொப்ரா ஆர்ச்சர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்ரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட், ரி-20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வரும் ஆர்ச்சர் கடந்த 87 நாள்களாகப் பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்ந்து வருகிறார்.
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு அணி வீரரும் பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் உள்ள வீரர்கள் வெளியே செல்லக்கூடாது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வெளி ஆட்களைச் சந்திக்கக் கூடாது. இதன்மூலம் கொவிட்-19 தொற்றிலிருந்து வீரர்களைக் காக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாட்டின்படி கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.