Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 50 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 50 | பத்மநாபன் மகாலிங்கம்

19 minutes read

ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும், தாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், அவர்களின் வரிப்பணத்தில் தான் தங்களது சம்பளம் வழங்கப்படுகிறது என்பதையும், உணர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் அலுவலக சூழலை அழகானதாக, ஆறுதல் தரும் இடமாக, மக்கள் பயமின்றி வரக்கூடிய ஓரிடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மக்களிடம் அமைதியாகவும் அன்பாகவும் நடந்து, அவர்களின் பிரச்சனைகளை நிதானமாக காது கொடுத்துக் கேட்டு, தீர்வை வழங்க வேண்டும். அவர்களுக்கு நிலைமை விளங்காத சந்தர்ப்பத்தில், இசைவான மனப்பான்மையுடன் தமது பேச்சுத் திறமையால் மனம் நோகாதவாறு கதைத்து புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கான வேலைகளை சுணக்காது உடனுக்குடன் செய்து கொடுத்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

பொன்னம்மா விரும்பியபடி விதானையாரும், மணியத்தாரும் சேர்ந்து தீர்மானித்து நாபன், சுசீலா இருவரினதும் சாதகங்களைப் பார்த்தனர்.  இருவருக்கும் நல்ல பொருத்தம். இருவருக்கும் விசயத்தைச் சொல்லவில்லை, ஆறுதலாக சொல்லலாம் என்று வைத்து விட்டனர்.

ஒரு நாள் மன்னாருக்கு நாபன் போக வெளிக்கிட்ட போது பொன்னம்மா “நான் உனக்கு ஒரு சோக்கான பொம்பிளையைப் பார்த்து வைச்சிருக்கிறன். அங்கை ரீச்சர்மாரை பார்த்து கீத்துப் போடாதை.” என்று சொன்னா. ‘இவ ஆரைப் பார்த்து வைச்சிருக்கிறா’ என்று யோசித்தபடி, ‘இப்ப நேரம் போட்டுது, அடுத்த முறை வந்து கேட்பம்.’ என்று வெளிக்கிட்டுப் போய் விட்டான்.

அடுத்த வெள்ளிக்கிழமை பின்னேரம் நாபன் பரந்தனில் வந்து இறங்க, சுந்தர் சங்கக்கடையைப் பூட்டி விட்டு, நாபனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். நாபன் அவரிடம் “சுந்தர், அம்மா போன கிழமை நான் அவசரமாக வெளிக்கிட்ட நேரம், தாங்கள் எனக்கு பொம்பிளை பார்த்து வைச்சிருக்கிறம் எண்டவ. ஆரைப் பார்த்து வைச்சிருக்கிறா?” என்று விசாரித்தான்.

சுந்தர் சிரித்து “வேறை ஆரை, மணியம் மாமான்ரை மகள் சுசீலாவைத் தான் பொருத்தம் பார்த்து வைச்சிருக்கினம், உங்களிட்டை சொல்லேல்லை. இனி சொல்லுவினம் தானே” என்றார். நாபன் ‘ஓ.. எப்பவோ சிறிய வயதில் பார்த்த சுசீலா இப்ப எப்படி இருப்பா.. ஆளை ஒருக்கால் பார்க்க வேணும்.’ என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டில் போய் தாயாரிடம் சுசீலாவைப் பற்றிக் கேட்டான். அதற்கு பொன்னம்மா “வடிவான பிள்ளையெடா. நல்ல குணம், என்னை எங்கை கண்டாலும் “விதானை மாமி எப்பிடி இருக்கிறியள்” எண்டு வந்து கதைக்கும். ஏன் நீ ஒரு நாளும் காணேல்லையா?” என்று கேட்டா.    நாபன் சந்தோசத்துடன் “ஐயாக்கு பரந்தனாலை மாறிப்போன போது நடந்த பிரியாவிடையிலை கண்டது தான். அவவுக்கு அப்ப ஆறு, ஏழு வயதிருக்கும். வளர்ந்த பிறகு நான் அந்த பிள்ளையை எங்கை காணுறது?” என்றான்.

றொட்றிக்கோ (Rodrico) மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு நாபன் போனபோது நண்பர்கள் “டேய் மணியத்தாற்றை கார் நிக்குது. சில வேளை உன்ரை ஆளும் வந்திருப்பா. வா பார்ப்பம்” என்றார்கள். தூரத்தில் தாயாருடனும் தம்பி, தங்கைகளுடனும் இருந்த சுசீலாவை காட்டினார்கள். பின் பக்கமாக நின்று காட்டியதால் நாபனுக்கு முகம் தெரியவில்லை. “சரி விடு, திரும்பி போகேக்கை காருக்கு தானே வரோணும். நாங்கள் முதலே காரெடியில் நின்றால் வடிவாய் பார்க்கலாம்.” என்றார்கள். நாபனும் நண்பர்களும் காரைத் தேடி வந்த போது கார் போய் விட்டிருந்தது.

இன்னொரு நாள் நாபன் பரந்தனுக்கு வந்த போது, குமரபுரத்தில் வாழும் ஒரு நண்பன் “நாபன், நான் வரேக்கை மாட்டுப்பட்டியில் சுசீலாவை கண்டனான். சைக்கிளில் ஏறு இப்ப போனால் பார்க்கலாம்.” என்றான்.  பட்டியெடிக்கு போகும் போது நாபன் நிமிர்ந்து பார்க்க தயங்கி பார்க்காமல் விட்டு விட்டான்.

முருகன் கோவில் சந்திக்கு போன பிறகு நண்பன்   “இப்ப எண்டாலும் ஒழுங்காய் பார், முழு பாவாடை போட்டது தான் சுசீலா. சட்டை போட்ட சின்னப்பிள்ளை இந்திரா.” என்று அடையாளம் சொல்லி கூட்டி வந்தான். இந்த முறை பார்க்கிறது தான் என்ற துணிச்சலுடன் வந்த நாபன், பார்க்கவும் செய்தான். அந்த சின்னப்பிள்ளை சிரிப்பதைக் கண்டதும் தலையை நேராக திருப்பி நல்ல பிள்ளை போல போய் விட்டான். நண்பன் “நீ சரிவரமாட்டாய்.” என்று முயற்சியை நிற்பாட்டி விட்டான்.

நாபன் எதிர்பார்க்காத வேளையில் எதிர்பார்க்காத இடத்தில் ஆபத்தான நிலமையில் சுசீலாவைக் கண்டான். நாபன் முன்பு ஒருமுறையும் பாட்டிகளில் (party) கலந்து கொண்டதில்லை. அன்று மிகவும் முக்கியமான நண்பர்கள் வற்புறுத்தியதாலும், எப்படியிருக்கிறது என்று தான் பார்ப்போமே என்ற எண்ணத்திலும், சுந்தரும் கலந்து கொண்டதாலும் சம்மதித்தான்.  இனி வீட்டுக்கு போய் படுக்கிறது தானே என்ற அசட்டு துணிச்சலில் கொஞ்சம் சாராயத்தைக் குடித்து விட்டான். நண்பர்கள் “சரி, இன்று ஒரு படம் பார்ப்போம்.” என்று வெளிக்கிட நாபனும் சம்மதித்து இரண்டு கார்களில் எல்லாருமாக தியேட்டருக்குப்  போனார்கள்.

நாபனின் கஷ்டகாலம் அங்கு மணியத்தாரின் கார் நின்றது. நாபன் “சுந்தர் நாங்கள் திரும்பி போவம். மணியம் மாமா கண்டு கதைச்சால் குடிச்சதைக் கண்டு பிடிச்சிடுவார். எல்லாம் பிழைச்சு போயிடும்.” என்று அவசரப்படுத்தினான்.

சுந்தர் அவனிடம் “பொறு, நீ காரில இரு. நான் நிலைமையைப் பார்த்து வாறன்.” என்று உள்ளே போனார். வந்த நண்பர்களுக்கு மணியத்தாரை நன்கு தெரியும். அவர்கள் போய் அவருடன் கதைத்தார்கள். சுந்தர் போய் பார்த்து விட்டு வந்து “நாங்கள் ரிக்கெற் எடுத்திட்டம், மணியம் மாமாவுக்கு நாங்கள் கதை குடுக்கிறம், கடைசி வரிசையில அவற்றை பிள்ளையள் இருக்கினம். நீங்கள் மூன்று, நான்கு வரிசை முன்னால போய் இருங்கோ.” என்றார்.

நாபன் மணியம் மாமாவுக்கு தூரத்தில் நின்று தலையாட்டி சிரித்து விட்டு, நண்பனுடன் நேரே போய் இருந்து விட்டான். சிறிது நேரத்தின் பின் மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்து கொண்டனர்.

நண்பன், “இன்ரவலுக்கு (Interval) லைற் போடுவாங்கள். பின் வரிசையில் நாலாவதாய் சுசீலா இருக்கிறா, பார்த்திடு.” என்றான்.  இன்ரவலுக்கு வெளியில் போகும் போது கடைக் கண்ணால் நாலாவது சீற்றிலிருந்த சுசீலாவை பயந்து பயந்து பார்த்தான், பயத்தால் அன்றும் வடிவாய் பார்க்கவில்லை.

மணியத்தார் வீட்டு விருந்தின் போது தான் சுசீலாவை வடிவாக பார்க்க முடிந்தது. பிறகு விசயங்கள் மளமளவென நடந்தன. நல்ல நாள் பார்த்து ஒழுங்கு செய்ய, திருமணம் 1975 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி சிறப்பாக நடந்தது.

நண்பர்களாக இருந்த விதானையாரும் மணியத்தாரும் உறவினர்கள் ஆனார்கள். சம்பந்திகளாக இணைந்து கொண்ட இருவரும் மணமக்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் அவர்களின் சந்தோஷத்தை எடுத்துக் காட்டியது.

தான் படிப்பிக்கும் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த, ஒரு ஆசிரியரின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, நாபன் சுசீலாவை கூட்டிச் சென்றான். 1977 ஆம் ஆண்டு பங்குனி மாதம் தபாலதிபர் வேலையை ராஜினாமா செய்த நாதன், அதே ஆண்டு, அதே மாதம் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை, முரசுமோட்டை முருகானந்தா மகா வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டான். பட்டதாரி என்பதனால் அன்றே பாடசாலையின் உப அதிபராகவும் பதவி ஏற்றான்.

1977 ஆம் ஆண்டு ஆடி மாதம் 21 ஆம் திகதி எட்டாவது பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவில் பல நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது.

தேர்தல் அதிகாரிகளுக்கு விதானைமார் தேர்தல் அன்று காலையும் மதியமும் சாப்பாடு கொடுத்து, அதற்கான கொடுப்பனவை பெற வேண்டும். ஆனால் வந்தாரை வரவேற்கும் வன்னியில் ஒரு விதானையும் சாப்பாட்டுக்கு காசு பெறுவதில்லை.

நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் யாரிடமாவது ஒழுங்கு செய்வார்கள். மகாலிங்கம் அதிலும் தனித்துவமானவர். தனது வீட்டில் ஆடு வெட்டி, தனது காணியில் விளைந்த நெல்லை அரிசியாக்கி சமைத்து வரும் அதிகாரிகள் திருப்தியாக சாப்பிடச் செய்வார்.

மகாலிங்கம் முதல் நாளே போய், வாக்குச்சாவடியை ஒழுங்கு செய்வதுடன், வந்துள்ள அதிகாரிகளில் எத்தனை பேர் சைவம், மற்றவர்கள் எல்லாரும்   ஆட்டு இறைச்சி சாப்பிடுவார்களா? என்ற புள்ளி விபரத்தை அறிந்து விடுவார்.  “தம்பி சுந்தர், ஆட்டுப்பட்டிக்குப் போய் நல்ல கொழுத்த கிடாய் ஆட்டை கொண்டு வந்து அடியுங்கோ.” என்று சுந்தரிடம் கூறி விடுவார்.

கிடாய் அடித்து வெட்டிக் கொடுக்கும் குழுவில் சுந்தரே பிரதானமாக இருப்பார். அவர் கிடாயின் இரத்தத்துடன் ஈரல் போன்ற உள்ளுறுப்புகளையும் சேர்த்து வறுத்து, சமையலுக்கு உதவ வந்தவர்களுக்கு கொடுப்பார். அதன் சுவை தெரிந்தவர்கள் அவர் எப்போது வறுவலை கொண்டு வருவார் என்று காத்திருப்பார்கள்.

பொன்னம்மா அதிகாரிகளுக்கு காலை உணவாக தோசை போடுவா. மூன்று நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் தோசைகளைச் சுட்டு அடுக்குவார்கள். தோசையுடன் சாப்பிடுவதற்கு சம்பலும் சாம்பாரும் இருக்கும்.

  

பொன்னம்மா இறைச்சி கறியை, மற்றவர்கள் பொறுப்பில் விடாமல் சுவை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தானே ஒரு பெரிய கிடாரத்தில் காய்ச்சுவா. மணி, இந்திரா, சுசீலா ஆகியோர் சமையல் வேலைகளில் பொன்னம்மாவுக்கு உதவி விட்டு, மத்தியானம் சாப்பாட்டு பார்சல் கட்டும் குழுவில் இருப்பார்கள். சைவ சாப்பாடு கேட்டவர்களுக்கு நாலைந்து கறிகளுடன், மிளகாய், வாழைக்காய் பொரியல்களும் இருக்கும்.

நாதனும் நாபனும் கடதாசி பெட்டிகளில், ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்சல்களை அடுக்கி, நிலையங்களின் பெயரையும் எழுதுவார்கள். தகப்பனுடன் சாப்பாட்டை கொண்டு போய் ஒவ்வொரு நிலையமாகக் கொடுப்பார்கள். சில அதிகாரிகள் “எங்களுக்கு கிளிநொச்சி நிலையம் கிடைச்சதும் மகாலிங்கம் அண்ணையின்ரை ஸ்பெஷல் சாப்பாடு தான் நினைவுக்கு வந்தது” என்று நாதன், நாபனுக்குக் கூறுவார்கள்.

1978—1979 வரையான இரண்டு வருட பயிற்சிக்கு தெரியப்பட்டு, வசாவிளானில் இருந்த பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சென்று, பயிற்சியை நிறைவு செய்து விட்டு, நாபன் 1980 ஆம் ஆண்டு தை மாதம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு கணித ஆசிரியராக நியமிக்கப்பட்டான்.

கிளிநொச்சி டீ. ஆர். ஓ. பிரிவில் கூடிய காலம் சேவை செய்த விதானையாராக மகாலிங்கம் இருந்தபடியால், புதிதாக நியமிக்கப்பட்ட விதானைமாருக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மகாலிங்கம் அவர்களிடம் “தம்பியவை, ‘கிராம சேவையாளர்’ என்று விதானைமாருக்கு அரசாங்கம் பெயர் வைத்ததன் காரணம், மக்களை கந்தோருக்கு அலைய விடாது, அவர்களை தேடி சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான்.” என்று கூறுவார்.

மகாலிங்கம் புதிய விதானைமாரிடம் “நீங்கள் மக்களின் பிரச்சினைகளை நிதானமாக காது கொடுத்து கேட்க வேண்டும், நடுநிலையான தீர்ப்பை வழங்க வேண்டும், வேலைகளை ஒழுங்கமைக்கும் ஆற்றல் அவசியம், உற்சாகமூட்டும் பேச்சினால் வேலைகளை திறம்பட செய்ய வைக்க வேண்டும்.” என்று அடிக்கடி சொல்லுவார்.

மகாலிங்கம் அவர்களுக்கு தான் சொல்ல, அவர்கள் கேட்டு அறிந்து கொள்ளும் முறையில் பயிற்சி கொடுக்க விரும்பவில்லை. கலந்துரையாடல் மூலம் அவர்கள் சந்தேகங்களை கேட்க தான் பதில் சொல்லும் முறையை கடைப்பிடித்தார். ஒருவன் “ஐயா, நாங்கள் நிர்வாகத்தை அறிய ஆற்றை புத்தகத்தை படிக்க வேணும்.” என்று கேட்டான்.

மகாலிங்கம் “தம்பி, நீ ஆங்கில ஆசிரியர்களின் புத்தகங்களை தேடி அலையாதை. திருவள்ளுவர் எல்லாத்தையும் சொல்லியிருக்கிறார்.

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்.”                                                                                                         

ஒருவன் சரியான காலத்தை தெரிவு செய்து, பொருத்தமான இடத்தில் ஒரு காரியத்தை செய்யும் திறமை பெற்றவனாயின் அவனால் உலகத்தையே வெற்றி கொள்ள முடியும் என்று சொல்லியிருக்கிறார். நீ, சனங்களை அருவி வெட்டு நடக்கும் போது, சிரமதானம் செய்ய கூப்பிட்டால் ஒருத்தரும் வராயினம்.” என்று விளங்கப்படுத்தினார்.

மகாலிங்கம் மக்கள் பிரயாணம் செய்ய கஷ்டமானதாகவும் பயமானதாயும் இருந்த ஒரு கிராமத்து வீதியை, சிரமதானம் மூலம் திருத்தி அமைக்க எண்ணி கிராம மக்களிடம், பயிற்சி பெறுபவர்களுடன், முதல் நாள் நேரே சென்று கதைத்தார்.

ஓய்வு பெற்ற ஒரு அரச உத்தியோகத்தர் “விதானையார், எங்களிருவருக்கும் வயது போய் விட்டது. நாங்கள் என்ன செய்யிறது?” என்று கேட்டார். மகாலிங்கம் “ஐயா, நீங்கள் ஒரு குடையை பிடிச்சுக்கொண்டு வந்து நின்றாலே காணும். விரும்பினால் கொஞ்ச பாணும் சம்பலும், வேலை செய்கிற ஆக்களுக்கு கொடுங்கோ.” என்றார்.

றக்டர் வைத்திருந்த ஒருவரிடம் “தம்பி, நீ காலமை உன்ரை உழவுகளைப் பார். பின்னேரம் வந்து நாங்கள் துப்பரவாக்கிய வீதியை கொஞ்ச நேரம் லெவெல் செய்து விடு.” என்று அன்பாகக் கேட்டார். அவன் “விதானையார், எங்கடை வீதி தானே. நான் வந்து ‘லெவெல்’ பண்ணி விடுறன்.” என்று உற்சாகமாகச் சொன்னான்.

ஒரு ஆச்சி வந்து “நானும் என்னெண்டாலும் செய்யோணும் தம்பி.” என்று கேட்டா. மகாலிங்கம் “அம்மா, நீங்கள் வேலை செய்யிற ஆக்களுக்கு வெறும் தேநீர் போட்டுக் கொடுங்கோ போதும். கஷ்டப்பட்ட நீங்கள் காசு கொடுத்து பால் வாங்க வேண்டாம்.” என்று பதிலளித்தார்.

கிராம மக்கள் அனைவரும் சிரமதானம் செய்ய வந்தனர். பற்றைகள் வெட்டப்பட்டு வீதி திருத்தப்பட்டது.

மற்றவர்கள் வெட்ட பயப்பிட்ட ஒரு பாம்புப்புற்றை விதானையார் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு மண்வெட்டியால் வெட்டத் தொடங்கினார்.

இளைஞர்கள் சிலர் ஓடி வந்து “நீங்கள் விடுங்கோ விதானையார், நாங்கள் வெட்டுறம்.” என்று மண்வெட்டியை வாங்கி வெட்டினார்கள்.   

ஆச்சி மட்டுமில்லை, வேறு சிலரும் தேநீர் கொண்டு வந்தனர். சில இளைஞர்கள் நகரத்திற்கு சைக்கிளில் போய் வடைகளை வாங்கி வந்தனர். மக்களுடன் இருந்து மகாலிங்கமும் பாணை சம்பலுடன் சாப்பிட்டு வெறும் தேநீரையும் குடித்தார்.

மாலையாகிய போது பெரும்பகுதி வேலைகள் முடிந்து விட்டன. இரண்டு றக்டர்களில் வந்தவர்கள் லெவெல் (level) பண்ண தொடங்கினார்கள். இரவில் பாம்புகளின் பயத்தாலும் கள்வர்கள் பயத்தாலும் மக்கள் பயன்படுத்த பயந்த வீதி முழுமையாகத் திருத்தப்பட்டது.

காசு எதனையும் வாங்காது, பொருட்களையும் மக்களின் சேவையையும் மட்டும் பெற்று, வீதியை திறம்பட திருத்தி முடித்த, மகாலிங்கத்தின் தலைமைப் பண்பையும் அனுபவத்தையும் கண்ட, பயிற்சி பெறும் விதானைமார், “மகாலிங்கம் விதானையாருக்கு இவ்வளவு மக்களின் அன்பும் மதிப்பும் கிடைப்பதற்கும், அவரின் செல்வாக்குக்கும் இப்படியான அவரது செயற்பாடுகள் தான் காரணம்.” என்று புரிந்து கொண்டார்கள்.

ஒரு புதிய விதானை “விதானை வேலை குறித்த நேரத்தில் மட்டும் செய்யிற வேலை இல்லையெண்டும் இருபத்து நாலு மணித்தியாலயமும் தயாராயிருக்க வேணும் எண்டும் சொல்லுறியள், அப்ப எங்கடை குடும்ப வேலைகளை ஆர் பார்க்கிறது?” என்று கேட்டான்.

எல்லாரும் வளர்ந்தவர்கள், சிலர் திருமணமும் முடித்தவர்கள், மகாலிங்கம் முஸ்பாத்தியாக பதில் சொல்ல நினைத்து “தம்பி, வேலை, வேலை எண்டு மட்டும் இருந்தால் பெண்சாதிமார் விட்டிட்டு போய் விடுவார்கள். நாங்கள் வேலைக்கும், எங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கும், இடையில் ஒரு சந்தோசமான சமநிலையை பேண வேண்டும், ஒருவரையும் பாதிக்க விடக்கூடாது.” என்று பதிலளித்தார்.

கூப்பன்களை பெறுவதற்கு மக்களை அலைய விடாது, மகாலிங்கம் தானே கிராமம் தோறும் உள்ள பாடசாலைகளுக்கு அல்லது சங்க கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதைக் கண்ட புதியவர்கள், விதானையார் சொல்வது மட்டுமல்ல சொன்ன மாதிரியே செய்கிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.

மகாலிங்கம் பயிற்சி பெற வந்தவர்களிடம். “தம்பிமார், நெப்போலியன் போர்களின் போது குதிரையில் ஏறி, வாளை சுழற்றிய படி, படைகளுக்கு முன்னால் போனதால் தான் பெரும்பாலான போர்களில் வெற்றி பெற்றான். நீங்கள் முன்னுக்கு போனால், மற்றவர்கள் பின்னால் வருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். அவர்கள் “மகாலிங்கம் விதானையாரிட்டை பயிற்சி பெற வாய்ப்பு கிடைச்சது பெரிய அதிஷ்டம், எங்களுக்குள் புது இரத்தம் ஓடுவது போல உணர்கிறோம்.” என்று சந்தோசமாக கதைத்துக் கொண்டார்கள்.

.

(அடுத்த அத்தியாயத்துடன் இவ் வரலாற்றுக் கதை நிறைவு பெறுகின்றது) 

   

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்      

.

 ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

பகுதி 43 –  https://vanakkamlondon.com/stories/2021/06/119015/

பகுதி 44 –  https://vanakkamlondon.com/stories/2021/07/120022/

பகுதி 45 –  https://vanakkamlondon.com/stories/2021/07/121109/

பகுதி 46 –  https://vanakkamlondon.com/stories/2021/07/122111/

 பகுதி 47 – https://vanakkamlondon.com/stories/2021/07/123126/

 பகுதி 48 –  https://vanakkamlondon.com/stories/2021/08/124048/

 பகுதி 49 –  https://vanakkamlondon.com/stories/2021/08/125071/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More