Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

7 minutes read

சொந்தத்தில ஒரு கலியாண வீடு, சோடிச்சிட்டு படுக்கேக்க விடியப்பிறம் ரெண்டு மணி ஆகீட்டுது. அப்பிடியே பந்தலுக்க போட்ட நாலு இரும்புக் கதிரையை ஒண்ட விட்டு ஒண்டு வளம் மாறி அடுக்கீட்டு (உருண்டு விழாம இருக்க) படுத்தது தான் தெரியும். திடீரெண்டு குளிர்ற மாதிரி இருக்க காலை உள்ளுக்க இழுத்து முழங்காலை மடக்கிக்கொண்டு, கழுத்து வரை சோட்ஸ்க்கு மேல கட்டின சாரத்தால போத்துப் படுக்க, “விநாயகனே வினை தீர்ப்பவனே “ எண்டு சந்திரன் சவுண்ட் எண்டு எழுதின குழாய்க்கால சீர்காழி பாடத் தொடங்கீட்டார். ஊரில எல்லா நல்லது கெட்டதில சந்திரன் இருப்பார்.

நல்ல காரியங்களுக்கு குடுக்கிற பந்தலை செத்த வீட்டுக்கு சந்திரன் குடுக்கிறேல்லை. பந்தல், சோடனை, கதிரை, amplifier ஓட ரெண்டு speaker எண்டு எல்லாச் சாமாங்களையும் வாடைக்கு எடுக்கக் கூடிய ஒரே இடம் சந்திரன் பந்தல் சேவை தான். எண்பதுகளின் கடைசிப் பகுதியில் தான் தகரப்பந்தலும் சிங்கப்பூர் சோடினையும். அதுக்கு முந்தின காலத்தில பந்தல் போடுறது கலியாண வீட்டில முக்கிய வேலை.

மாப்பிளை வீட்டை பொன்னுருக்கு முடிய பொம்பிளை வீட்டை வந்து கன்னிக்கால் போட்ட உடனயே வேலை தொடங்கீடும். பெரிய பனைமரம், காட்டுத்தடி, பனஞ்சிலாகை எல்லாம் ஊரில முதலே தேடி எடுத்து வைச்சிடுவினம். கன்னிக்கால் போட்டு முடிய அங்கால பந்தல் வேலை தொடங்க, இங்கால நாள் பலகாரத்துக்கு அடுப்பு வைப்பினம். முதலில பால் ரொட்டி தான் செய்யிறது. முதல் சுட்ட பால் ரொட்டியை உடைச்சு அடுப்புக்கல்லுக்கு குடுத்திட்டு தான் ஆக்களுக்கு குடுக்கிறது. கலியாணத்துக்கு சுடுற பலகாரத்தில காவாசி கலியாணத்துக்கு முதலே முடிஞ்சிடும். ஒற்றை விழ சுடோணும் எண்டு சுடுற சில பலகாரம் சபைக்கு வராமலே போயிடும்.

அப்ப கலியாணத்துக்கு make up பண்ணிறது எண்டது ஆளுக்கு இல்லை வீட்டுக்குத்தான். கலியாணத்தோட தான் வீடுகளுக்கு விடிவு வாறது. வேலீல இருக்கிற கிழுவை, பூவரசு வெட்டி கிளையை விறகுக்கு எடுத்து வைக்கிறது, கிணத்தடி தொட்டீல சிப்பி சேந்த சுண்ணாம்பை ஊறப்போட்டு வீட்டுக்கு வெள்ளைச் சுண்ணாம்பும், மதிலுக்கு மஞ்சளும் அடிக்கிறது, குசினியோட சேர்த்துப் பலகாரம் சுடுறதுக்கும், சமையலுக்கும் எண்டு ஒரு பத்தியும் போடிறது, குருமண் பறிச்சுப் பரவுறது எண்டு வீட்டுக்கே ஒரு களை வந்திடும்.

வீடு கட்டிற மாதிரித்தான் பந்தலும் போடிறது. பொன்னுருக்கு முடிய இடம் பாத்து, கிழக்க இல்லாட்டி வடக்க வாசல் வாற மாதிரிப் பாத்து தேங்காய் உடைச்சுப் பந்தல் வேலை தொடங்கிறது . அத்திவாரம் மாதிரி கயிறு கட்டி நேர் பாத்து ஆழமாக் கிடங்கு கிண்டி பெரிய மரம் நட்டு நிமித்தீட்டு பிறகு தீராந்தி போட்டு, குறுக்கு மரம் கட்டிறது. மரம் பிலப்பெல்லாம் பாத்திட்டு கடைசீல கிடுகு வேயிறது. கீழ இருந்து ரெண்டு ரெண்டாக் கிடுகு எறிய ஏறி நிக்கிறவை அடுக்கி வேஞ்சு அதை பனை ஈக்கிலால கட்டுவினம். அப்பிடிக் கட்டேக்க ரெண்டு ரெண்டா ஓலை பிடிச்சுக் கட்டினா எந்த மழைக்கும் ஒழுக்கு இருக்காது. பந்தல் முடிய வெள்ளளக்குருமண் பரவிவிட நல்லூர்த் தண்ணிப் பந்தல் மாதிரி இருக்கும்.

கலியாணத்துக்கு முதல் நாள் சோடிக்கிறதுக்கு வீட்டில இருக்கிற பெடியன்டை friends இல்லாட்டி கோயில், வாசிக சாலை எண்டு பெடியள் குறூப் ஒண்டு வரும். சோடினை, சபை போடிறது எண்டு முழு வேலையும் அவை தான் செய்யிறது . சணல் கயிறு எத்தினை றாத்தல், இளைக்கயிறு எத்தினை முடிச்சு, வெள்ளை சீமெந்து நூல் எத்தினை பந்து, மஞ்சளும் வெள்ளையும் Tissue பேப்பர் எத்தனை, crepe paper எத்தனை கட்டு, பிளாஸ்டிக் மாலை எத்தினை எண்டு எல்லாம் கணக்குப் பாத்து முதல் நாளே வாங்கி வைச்சிடுவினம். நாலு பெற்றோல் மக்ஸ் வாடைக்கு எடுத்து மன்டில் எல்லாம் மாத்தி பின்னேரம் மண்ணெண்ணை விட்டு காத்து அடிச்சு பத்த வைச்சிட்டு இரவிரவாத்தான் வேலை செய்யிறது. பாவம் friends எல்லாம் வேலை செய்யிறாங்கள் எண்டு வாற மாப்பிள்ளையை, நாளைக்கும் நித்தரை முழிக்கோணும் இண்டைக்கு போய் படும் எண்டு அனுப்பிப் போட்டு வேலை தொடரும்.

ரெண்டு மரத்துக்கு குறுக்கா நூலைக் கட்டீட்டுத்தான் tissue ஒட்டிற வேலை தொடங்கிறது . ரெண்டா மடிச்ச tissue paper ஐ கீலம் கீலமா வெட்டி பிறகு நடுவால குறுக்க வெட்டி அடுக்கி காத்துக்கு பறக்காமல் கல்லை வைக்க ஒருத்தர் பசை வாளியோட வருவார். வந்தவர் பசையை பூசிக் கொண்டு போக ரெண்டு பேர் சேந்து வெள்ளையும் மஞ்சளும் கலந்து tissue paper ஐ மாறி மாறி ஒட்டுவினம். வீட்டுக்குள்ள crepe paper, வெளியில light post இல இருந்து இறக்கி சாய்வாக் கட்டின tissue pape , பந்தலுக்குள்ள கலர் மாலை எண்டு எல்லா வேலையும் ஒரே நேரத்தில நடக்கும். அடிக்கடி ஆரும் வந்து தேத்தண்ணி இந்தாங்கோ , பலகாரம் இந்தாங்கோ எண்டு வந்து வேலையை வேவு பாப்பினம். பக்கத்து வெறும் வளவுக்க இறக்கி வைச்ச பின்னேரக் கள்ளு ரெடி எண்டோன்ன signal வர கொஞ்சக் கொஞ்சப் பேரா ஆக்கள் காணாமல் போய் திரும்பி வருவினம், அதுகும் வெத்திலை வாயோட. கடைசீல வாழைக்குலை ரெண்டையும் நிமித்திக் கட்டீட்டு இளனியைக்குத்தி வைச்சுட்டு போய் உள் வேலைகள் மிச்சத்தை முடிக்கிறது.

இதுக்குள்ள பத்தாத்துக்கு ஒரு பெருசு வரும் கருத்துச் சொல்ல, “மாலை சரிஞ்சிருக்கு மூலையைஉயத்திக்கட்டோணும் எண்டு. இதை எல்லாம் கணக்கெடுக்காம வேலை தொடரும்.
எல்லாம் முடிய பந்தலுக்குள்ள முன்னுக்கு பாய் விரிச்சு பின்னுக்கு கதிரையை அடுக்கி முடிய காலமை சாப்பாட்டுக்கு இட்டலி அவிக்கிறாக்கள் எழும்பீடுவினம்.

நானும் இப்படி ஒரு கலியாணப் பந்தல் வேலை எல்லாம் முடிச்சிட்டுப் படுக்கத் தான் சீர்காழி பாடத் தொடங்கினார்.
“காலமை தோயவாக்க வாறாக்களுக்கு கோப்பியை குடு எழும்பு “ எண்டு அம்மா எழுப்பி விட, பாத்தா முழு வீடும் எழும்பி இருந்தது. மேக்கப்காரீன்டை ஆக்கினை இல்லாத்தால அரக்கப் பறக்காம அப்ப தான் எழும்பி வந்த மாமியை தோய வாக்க மாப்பிளை வீட்டுக் காரரும் வந்து இறங்கிச்சினம். அந்தக்கார் வர இங்க இருந்து கார் ஒண்டு மாப்பிளையை தோய வாக்க வெளிக்கிட்டுப் போச்சுது.
இப்ப சீர்காழிக்கு இடைவேளை குடுத்திட்டு TMS உள்ள வர கலியாணம் களை கட்டத் தொடங்கிச்சுது.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்.

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More