வணக்கம் லண்டன் இணையத்தின் முதலாம் ஆண்டு நிறைவையிட்டு சிறப்பு நேர்காணல் | இளம்வயதில் திறமைகொண்ட சாதனைப்பெண்
“சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வி சிந்துஜா இந்திரநேரு அவர்களை இலண்டன் விமான நிலையத்தில் வைத்து சில நிமிடங்கள் உரையாடினோம். இன்றைய பொழுதுக்கு மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்ட சிந்துஜா விருந்தினர்களை வரவேற்க வந்திருந்தார். ஷி 24 என்ற இணைய சஞ்சிகையை இலண்டனை தளமாக கொண்டு வெளியிடும் இவர் பல்லாயிரம் இணைய வாசகர்களை கொண்டுள்ளதுடன் வருடம்தோறும் சில சிறப்பு நிகழ்வுகளை நடாத்திவருகின்றார். இவரது “சுயம்வரா” கண்காட்சி இவ்வார இறுதியில் அதாவது 14ம் மற்றும் 15ம் திகதிகளில் மத்திய லண்டனில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர ஜோடி சிநேகா பிரசன்னா இந்த நிகழ்வுக்கு வருகைதர உள்ளார்கள். அவர்களை வரவேற்க ஆயத்தமாக விமான நிலையத்தில் பூச்செண்டுடன் நின்றார். வழமைபோல் வணக்கம் சொல்லி எப்படி உங்கள் கண்காட்சி ஒழுங்குகள் எல்லாம் முடிந்ததா எனக்கேட்டோம்?
வணக்கம், வணக்கம் லண்டன். 80 சதவீதம் ஏற்பாடுகள் முடிந்துவிட்டன, இவர்களின் வருகைக்காக கார்த்துகொண்டு இருக்கிறோம் – ஸ்னேஹா பிரசன்னா வந்த பின்பு 100 வீதம் ஒழுங்குகள் எல்லாம் முடிந்து விடும் என புன்னகையுடன் சொன்னார்.
இந்த கண்காட்சியில் எந்த எந்த நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன? அவர்கள் எவ்வாறான முறையில் காட்சிப்படுத்தப் போகின்றார்கள்? யார் யார் பார்வையாளர்களாக வர முடியும்?
இந்த கண்காட்சியில் மொத்தம் 35 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன, இவர்கள் தங்களின் விளைபொருட்களை பார்வையிடவும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர். அது மட்டும் அல்லாது 12 நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கவுள்ளனர். இக் கண்காட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதிலும் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடம் திருமணம் செய்ய இருக்கும் ஜோடிகளுக்கு அறிய பரிசுகள் கார்த்துக்கொண்டு இருகின்றன. இக் கண்காட்சியில் திருமணத்துக்கு தேவையான சாறி, முக அலங்காரம், சிகை அலங்காரம், புகைப்படம், மண்டபம், உணவு, நகைகள் முதற்கொண்டு இங்கே எல்லாவற்றையும் காணலாம்.
பிரமாண்டமாக நடாத்த உள்ளீர்கள், பல பிரபலங்கள் வருகை தர உள்ளார்கள். யார் யாரை அழைத்துள்ளீர்கள், இந்த கண்காட்சியில் அவர்கள் என்ன செய்ய இருக்கின்றார்கள்?
இக் கண்காட்சிக்கு ஸ்னேஹா மற்றும் பிரசன்னா இன்று வருகை தருகின்றனர். அது மட்டும் அல்ல கணேஷ் வெங்கட்ராமன் வர இருந்தார் அனால் ஒரு சில காரணங்களால் வர முடியாமல் போய் விட்டது. இது ஒரு திருமண கண்காட்சி என்பதால் அவர்களிடம் இருந்து நடனத்தை எதிர்பார்க்க முடியாது இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக இவர்கள் இருவரும் பேஷன் ஷோ வில் நடப்பார்கள். முதல் நாள் ஸ்னேஹா சாரியிலும், பிரசன்னா வேஷ்டியிலும் ஒரு திருமணத்திற்கு எப்படி தயார் ஆவார்களோ அதே போல் அலங்காரம் பண்ணி பேஷன் ஷோ வில் நடப்பார்கள், அதே இரண்டாவது நாள் ரிசெப்ஷன் அலங்காரத்தில் காட்சி அளிப்பார்கள்.
அப்படியானால் உங்களுடைய இந்த கண்காட்சியில் பேஷன் ஷோவும் இடம்பெறுமா?
நிச்சயமாக, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் வெவ்வேறான ஆடை அலங்காரத்துடன் பேஷன் ஷோ நடைபெறும் முக்கியமான விடையம் அதில் ஸ்னேஹா மற்றும் பிரசன்னா கலந்துகொள்கின்றார்கள்.
உங்களுடைய இந்த முயற்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? குறிக்கோள் என்ன?
நான் 2006 ஆம் ஆண்டில் இருந்தே திருமண ஏற்பாடுகளுக்கு ஒருங்கினைப்பாளராக இருந்து வந்தேன், கடந்த வருடம் 2013 மார்ச் 17 அன்று “டும் டும் டும்” என்ற பெயரில் தெற்காசிய திருமண கண்காட்சி முதன் முதலில் ஆரம்பித்தேன், அதன் பயனுள்ள பெரும் வெற்றியை தொடர்ந்து “சுயம்வரா” என்ற பெயரில் இந்த வருடம் இரண்டாவது தடவையாக செய்ய உள்ளேன். இதன் மூலம் திருமணத்திற்கு தேவையான அனைத்து விடயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அதன் மூலம் சிறு மற்றும் பெரும் தொழில் வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய முகவரியை தருகின்றோம் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிந்துஜா சொல்லிமுடிக்க சினேகா பிரசன்னா இருவரும் விமான நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்தார்கள். பரபரப்படைந்த சிந்துஜா எமக்கு நன்றி சொல்லிவிட்டு அவர்களுக்கு கையசைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
சுப்ரம் சுரேஷ் | வணக்கம் லண்டன் க்காக