2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
கிளிநொச்சி நகரை விட்டு படிப்படியாக மக்கள் வெளியேறினார்கள் கிளிநொச்சி நகர் வெறிச்சோட தொடங்கியது.
மக்கள் கிளி நகரை விட்டு பரந்தன் முரசுமோட்டை வீதி ஊடாக முரசுமோட்டைக்கு அப்பால் உள்ள பிரதேசங்களை இணைத்து செல்கின்ற பாதைகளின் இருமருங்கிலும் தற்காலிக குடிசைகள் அமைத்து குடியேறினர். கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பல பகுதிகளை தற்காலிகமாக தர்மபுரம்இ விஸ்வமடு கல்லாறு போன்ற பகுதிகளுக்கு நகர்த்தியிருந்த போதும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சில பகுதிகள் இயங்கிக்கொண்டிருந்தன.
25.12.2008 அன்றைய நாள் முழுவதுமான கடமைகளை முடித்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை பகுதியை வந்தடைந்தேன். பி.ப 7.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகாமையில் ஏனைய உத்தியோகத்தர்களோடு இருந்த வேளை தீடிர் என பாரிய வெடி சத்தம் ஒன்று கேட்டது. கட்டிடத்தின் சில பகுதிகள் உடைந்து விழுந்தன. அடுத்த கணம் குண்டு வெடிப்பின் மணம் வீசியது. கடமையில் இருந்த ஒவ்வெருவரும் மற்றவர்களுக்கு எதுவும் நடந்ததா? நோயாளிகளுக்கு ஏதாவது நடந்ததுவா? என்பதை கவனத்தில் கொள்ளவேண்டி இருந்தது. எனவே உடனடியாக வெளிப்பகுதிக்கு வந்த உத்தியோகத்தர்களும் நானும் வெளிநோயாளர் வைத்தியர் அறை தாக்கப்பட்டு புகை மூட்டம் எழும்புவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
வழமையாக அவ் அறையின் ஒரு பகுதியில் தேனீர் தயாரிப்பதற்காக தங்கி இருக்கும் ரூபி என்னும் உத்தியோகத்தர் சற்று முன்னராக அவ் அறையை விட்டு வெளியேறியதால் அவலம் தவிக்கப்பட்டது. ஒருவருக்கும் பாதிப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்ட நாங்கள் அனைவரும் அந்த அறைப் பகுதிக்கு சென்றோம். அவ் வெடிப்பினால் ஏற்ப்பட்ட புகை சூழ்ந்து காணப்பட்டது. பிரதான கட்டிட சுவர் பகுதியில் இருந்து சில மீற்றர் அப்பால் விழுந்து வெடித்த செல் வீச்சினால் ஏற்ப்பட்ட சேதம் அவ் அறையில் கண்ணாடி கதவு யன்னல்கள் சிதறி கிடந்தன.
நீண்ட தூரங்களுக்கு அப்பால் இருந்து வீசப்படும் செல் குறிப்பிட்ட பகுதியை வந்தடையும் முன்னர் அச் செல்லின் சத்தம் கேட்கும் இது “Sonic boom” அதாவது ஒலியை விட வேகமாக நகரும் ஒரு பொருள். sound( சத்தம்) வேக எல்லையை கடக்கும் போது பாரிய வெடிப்பு சத்தம் போன்ற சத்தம் கேட்டாலும் உண்மையில் வெடிப்பு எதுவும் அப்பகுதியில் ஏற்ப்படுவதில்லை போர் காலத்தில் மக்களுக்கு செல் சத்தம் பல சமயங்களில் கேட்காவிட்டாலும் “Sonic boom” இனால் ஏற்படும் சத்தம் அனேகமாக எல்லோருக்கும் கேட்கும் இந்த இயற்கை விதியினால் மக்கள் பலரும் செல் வீச்சு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மிக விரைவாக தங்களை நிலைபடுத்தி கொள்ள ஏற்றதாக அமைந்தது. இச் சத்தம் கேட்ட சில வினாடிகளுக்குப் பின்னர் தான் செல் வந்து வெடிக்கும் அங்கிருந்த மக்கள் அனைவரும் இது பற்றி தெரிந்திருந்தனர். நாங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் இச் சத்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக அந்த அந்த பகுதிகளில் நிலத்தில் விழுந்து படுப்பதன் மூலம் சேதங்களில் இருந்து தப்பிக்கொள்ள கூடியதாக இருந்தது. மிக கடுமையான செல் வீச்சு நிகழ்கிற போது மேற்படி இயற்கை விதி பல உயிர்கள் தப்பிக்கொள்ள காரணமாக இருந்தது.
நான் அடிக்கடி சிந்திக்கும் இரண்டாவது இயற்கை விதி செல் வீச்சில் இருந்து தப்பிக்கொள்ள காரணமாக இருந்தது. அதாவது நிலமட்டத்தில் விழுந்து வெடிக்கின்ற குண்டுகள் நிலப்பகுதியில் இருந்து குறிப்பிட்ட சாய்வுக்கு மேலாக வெடித்து சிதறல்கள் பறக்கும் அதாவது செல் ஆனது நிலத்திக்கு மேலாகவே வெடிப்பதனால் நிலத்தில் படுப்பதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்.
ஆகவே அனேகமான சண்டை இடம் பெறும் பகுதிகளில் பதுங்குழிகள் இல்லாத இடத்திலும் நிலத்தில் விழ்ந்தது படுப்பதன் மூலம் தப்பிக்கொள்ள முடியும்.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/