சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார்.
இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.