சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஜெயலலிதாவை கர்நாடகா ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது.
இதையடுத்து ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் அவர், தனக்கு 66 வயதாகி விட்டது என்பதாலும் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாலும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் 12.40 மணிக்கு 65–வது மனுவாக ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் லோகூர், சிக்ரி ஆகிய 3 பேரை கொண்ட அமர்வு பெஞ்ச் முன்னிலையில் ஜெயலலிதா மனு மீதான விசாரணை நடந்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை எந்த விதத்திலும் தாமதப்படுத்தக் கூடாது. இந்த விசாரணைக்கு தேவையான எல்லா ஆவணங்களையும், தகவல்களையும் கர்நாடகா ஐகோர்ட்டுக்கு ஜெயலலிதா 2 மாதங்களில் கொடுக்க வேண்டும்.
அதாவது டிசம்பர் மாதம் 18–ந்தேதிக்குள் கோப்புகள் அனைத்தையும் சரி பார்த்து கொடுத்து விட வேண்டும். இதில் ஒரு நாள் தவறினாலும் சுப்ரீம் கோர்ட்டு பொறுத்துக் கொள்ளாது. மேல் முறையீட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.