பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டம் லக்கிடார் பகுதியில் சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. நேற்று அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொழுகையில் பங்கேற்றவர்கள் அங்கு மிங்கும் ஓடினர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 40 பேர் பலியாகினர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் ஷிகார்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு ஜுன்டுல்லா தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இவர்கள் தலிபான்களிடம் இருந்து பிரிந்தவர்கள் இத்தாக்குதல் குறித்து ஜுன்டுல்லா தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் பஹத் மார்வார்ட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம். ஷியா பிரிவினர் எங்களது எதிரிகள். எனவேதான் எப்போதும் அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம்’’ என்றார்.
மனிதகுண்டு தாக்குதல் நடந்த மசூதியில் ரத்தம் உறைந்து கிடக்கிறது. சுவர்கள் முழுவதும் ரத்த கறையாக உள்ளது. ரத்த வெள்ளத்தில் காயமடைந்தவர்களை அவர்களது உறவினர்கள் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சம்பவத்தை தொடர்ந்து சிந்து மாகாண தலைநகர் கராச்சிக்கு பிரதமர் நவாஸ் செரீப் விரைந்து சென்றார். ஷிகார்பூர் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து விசாரணைக்கு உத்தர விட்டார்.
இதற்கிடையே தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கராச்சி வீதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.