சீன கப்பல்களில் உயிரிழக்கும் இந்தோனேசியர்கள்: மீண்டும் ஒரு இந்தோனேசியர் மரணம்
Long Xing 629 எனும் சீன மீன்பிடி கப்பலில் பணியாற்றிய இந்தோனேசியர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருக்கும் இந்தோனேசிய மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏரி புர்போயோவுக்கு அக்கப்பலில் பணியாற்றிய முன்னாள் தொழிலாளி வழியாக இத்தகவல் கிடைத்திருக்கிறது.
பெரு நாட்டின் கடல் பகுதியில் கப்பல் பயணமாகிய பொழுது இந்த மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் எனக் கூறியிருக்கிறார் சம்பந்தப்பட்ட கப்பலின் மாலுமி.
இக்கப்பலில் இந்தோனேசியர் ஒருவர் பணியிடத்தில் நடந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சாளர் Teuku Faizasyah, இதுகுறித்த தகவலை பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சரிபார்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதம் Lu Qing Yuan Yu 623 எனும் கப்பலிலிருந்த மாலுமிகள் ஒரு இந்தோனேசிய மாலுமியின் உடலைக் கடலில் தூக்கி வீசுவது போன்ற காணொலி ஒன்று வெளியாகியிருந்தது. அதற்கு முன்பு, மற்றொரு சீன மீன்பிடி படகில் 4 இந்தோனேசிய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
Destructive Fishing Watch எனும் அமைப்பின் தகவலின் படி, நவம்பர் 2019 முதல் ஜூன் 2020 வரையிலான காலக்கட்டத்தில் சீன கப்பல்களில் பணியாற்றிய 30 இந்தோனேசியர்கள் சுரண்டலுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளது. அதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காணாமல் போகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.