தான் தவறு செய்திருந்தால் தன்னை கட்சியிலிருந்து நீக்குமாறு தலைமையிடம் வேண்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க.யின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஒலிப்பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்சியில் நிர்வாக செயற்பாடுகள் சிறந்த முறையில் இல்லை. நெல்லை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மண்டலப் பொறுப்பாளரினாலேயே கட்சி அழிவடைந்தது.
ஆகையால் இவைகளை சீர் செய்யுமாறு ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டது உண்மை. ஆனால் இதற்காக தன்னை அழைத்து விசாரிக்காமல் சமூக வலைத்தளங்களின் என்னைப் பற்றி தவறாக தகவல் பரப்பியமை கவலையளிக்கிறது.
மேலும், நான் தவறு செய்திருந்தால், கட்சியிலிருந்து தலைமைகள் நீக்குவதை விடுத்து இழிவான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு நேர்மையான கருத்துக்களை வெளியிடுவது பிடிக்கவில்லையென்றால், என்னை கட்சியிலிருந்து நீக்குங்கள்” என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நன்றி – Yuganthini