13 ஆவது தெற்காசிய விளையாட்டுப்போட்டி நேபாளத்தில் நடைபெறவுள்ளது.இதில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களும் பங்குபற்றுகின்றனர்.
இவர்களில் இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ஏழு பரீட்சாத்திகள் பங்கேற்கவுள்ளனர். இதனால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நேபாளத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏழு பரீட்சாத்திகளும் நேபாளத்தில் வைத்து பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சையானது நேபாளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திலே நடைபெறவுள்ளதாகவும், இலங்கையில் பின்பற்றப்படும் அதே ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவே இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களமும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.