ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர்.
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்றுதான் சிங்கள மக்கள் அதைச் சொல்கின்றனர்.
யார் இந்தப் போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் இளைஞர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் இங்கே இடம்பெற்ற போரைக் காட்டி கடன் வாங்கினார்கள்.
இப்போதும் நாட்டைக் காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம். எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால், இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.
நாம் ஒரு தசாப்தமாக மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல் இருந்தோம். எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். அன்று எமக்காக யாரும் வரவில்லையே என்று இப்போது தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர். அதற்காக நாம் அப்படியே இருக்கமாட்டோம். சிங்கள மக்கள் அன்று செய்த தவறைச் செய்ய மாட்டோம். உள் மனதிலே உறுத்தல் இருந்தாலும், இன்றைய உங்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.
இதே காலிமுகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீகப் போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அன்றும் நாம் சமத்துவத்துக்காகப் போராடினோம். ஆகவே, உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம்.
இளைஞர்களின் போராட்டத்தில் பல நல்ல விடயங்களை நாம் காண்கின்றோம். பிரதமர் தனது உரையில் இனவாதத்தை தெரிவிக்கும் முகமாக பேசினார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதை வெளிப்படையாக எதிர்த்தார்கள்.
தமிழ் மக்களை போராட்டத்திற்கு வருமாறு அழைத்தார்கள். பொட்டோடும் பூவோடும் வருமாறு அழைத்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் அங்கு போனார்கள். அரசியல் கட்சிகளை எதிர்த்தார்கள். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேவையில்லை என்கின்றனர்.
ஆனால் நாம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற பாராளுமன்றம் சென்றவர்கள் அல்ல. எமது மக்களுக்காக நாம் பாராளுமன்றம் சென்றவர்கள் அதையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தம்பி போனால் அண்ணன் ஆட்சிப்பீடம் ஏறுவார் என்ற பயம் வேண்டாம். இரண்டு தடவை அவர் ஜனாதிபதியாக இருந்து விட்டார். ஆகவே, பாராளுமன்றம் அதை முடிவு செய்யும். நிலையான அரசு இப்போது அவசியம். அதற்குப் பல முயற்சிகள் நடைபெறுகின்றன.
நான் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களுடன் பேசியுள்ளேன். தற்போது இளைஞர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார்கள். நல்ல விடயம். ஆதரவை தெரிவியுங்கள்.
நாங்கள் இந்த போராட்ட இளைஞர்களுடன் எங்களுடைய இளைஞர்களும் இணைவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொடுப்போம். நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.
ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நேரடி ஆதரவை கொடுப்பது கூட காலத்தின் தேவையாக உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு எதிரான பிரரேணைகள் பாராளுமன்றித்தில் கொண்டு வரப்படவுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எமது இளைஞர்களும் இணையும் போது தான் எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்த முடியும். இணைப்பு அத்தியாவிசயமானது. ஏனெனில் அவர்கள் அரசியல்வாதிகளுடன் பேச மாட்டோமென தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
இளைஞர்கள் தான் எமது நிலைப்பாடுகளை எடுத்துச் செல்ல முடியும். இலங்கையில் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக கேட்டுக்கொட்டிருக்கும் கோரிக்கைகள் சம்பந்தமாக அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலைப்பாடுகளையும் நாங்கள் கேட்க வேண்டும்.
நாளையதினம் எமது இளைஞர்கள் தார்மீக ஆதரவுக்காக போராட்டத்தை ஏற்பாடுசெய்வதாக தெரிவித்துள்ளார்கள். அதனை அவர்கள் அறிவிப்பார்கள். இங்கே இருந்து இளைஞர்கள் பிரதிநதிகள் அங்குவருமாறு அழைப்பு வந்துள்ளது. அதனை நாம் சாதகமாக பரிசீலிப்போம்.
இளைஞர்கள் தான் போராட்டத்தை செய்ய வேண்டும். இந்த மாற்றம் முற்றுமுழுதாக எங்களுக்கும் சாதமான மாற்றமாக வரவேண்டும். இது சந்தர்ப்பவாத அரசியல் அல்ல. இந்த ஜனநாயக போராட்டத்தை எமக்கும் சாதகமாக மாற்றடைய நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என்றார்.