அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி சுலைமானின் இறுதிச் சடங்குக்காக ஈரானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஈரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கிய காசிம் சோலெய்மனியின், இறுதி ஊர்வலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் நடந்தது.
மிகப் பிரமாண்டமாக நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில், வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈராக்கைச் சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக மொத்தம் 30 கி.மீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்ட இந்த இறுதி ஊர்வலத்தில், 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என கூறப்படுகின்றது.
அயதுல்லா கோமேனி மறைவின் போது திரண்ட மக்கள் கூட்டத்தை இந்த இறுதிச் சடங்கு கூட்டம் நினைவுபடுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதியின் கொலை அமெரிக்காவுக்கு இருண்ட தினத்தைக் கொண்டுவரும் என காசிம் சுலெய்மனியின் மகள் ஜீனப் சுலெய்மனி தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொல்லப்பட்ட ராணுவ தளபதியின் பதவிக்கு நியமிக்கப்பட்ட புதிய தளபதி இஸ்மாயில் குவானி, “தொடர்ந்து சுலெய்மனி பாதையில் பயணிப்போம் என்றும் சுலெய்மனி இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்திலிருந்து விரட்டுவதுதான் ஒரே லட்சியம் எனவும் கூறியுள்ளார்.