இலங்கையில்டெங்கு நோயினால் மரணமடைவோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இரண்டு தினங்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயினால் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சாதாரணமாகவே மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை டெங்கு நோய் பரவும் நிலை எமது நாட்டில் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெங்கு என்பது கொரோனா வைரஸ் போல் ஒரு மீற்றர் இடைவெளியை மட்டும் பின்பற்றி தப்பிக்க முடியாது.
டெங்கு வைரஸ் அதை விட மிக வேகமாக பரவக்கூடியது. அதனைக் கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
குறிப்பாக இரண்டு தினங்களுக்கு மேல் காய்ச்சல் காணப்படுமானால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுமாறும் வெறுமனே காய்ச்சல் நின்றுவிடும் என இருக்க வேண்டாம் என்றும் அவர் அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.