கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி.
அங்குள்ள தேவாலயம் ஒன்றின் தலைமை பாதிரியாருக்குச் சொந்தமான பண்ணையில் உடல் மெலிந்த மோசமான நிலையில் சிலர் இருப்பதாக கடந்த வாரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அந்தப் பண்ணையில் அந்நாட்டு பொலிஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
திடுக்கிடும் தகவல்
இது குறித்து நடத்தியபொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது, பாதிரியார் தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் யேசுவைக் காணலாம் எனப் போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து தலைமை பாதிரியாரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய மேலதிக விசாரணைகளில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் தனது பண்ணையில் புதைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
90 சடலங்கள் மீட்பு
அதனையடுத்து, அந்த பண்ணையில் பொலிஸார் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், அங்கு தோண்டதோண்ட சடலங்கள் கிடைத்தன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி, “800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
புதருக்குள் மறைந்த 213 பேர்
இதேவேளை, உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், பொலிஸாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை பொலிஸார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.