அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரில் உள்ள கிங்செஸிங் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீதியில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடினர். சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்ற நிலையில், வீதியில் பலர் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், படுகாயம் அடைந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.