நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, ‘தி ஷோ பீப்பிள்’ சார்பில் ஆர்யா வழங்கும் படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’.
இந்த படத்தில் இடம்பெற்றுள், ‘சீனிவாசா கோவிந்தா’ பாடலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது, உலகில் உள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டுமென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், அரசியல் பிரமுகருமான பானுபிரகாஷ்ரெட்டி என்பவர், நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த படம் வெளியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தப் பாடலை நீக்க வேண்டும். ஏழுமலையான் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வெங்கடேசபெருமாளின் பக்தி பாடலை ரீமிக்ஸ் செய்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்டதற்காக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் குற்றவியல் வழக்கு தொடரப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சந்தானம், “கோவிந்தா’ என்ற பாடலில் கடவுளை நான் அவமதிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு விடயத்தைப் பற்றி சொல்வார்கள். படம் பார்க்கும் சிலர், ‘இது சரியில்லை, அதை மாற்ற வேண்டும்’ என்று சொல்வார்கள். அவற்றை எல்லாம் ஏற்க முடியாது. நீதிமன்றம் மற்றும் தணிக்கை குழு சொல்வதை மட்டுமே செய்ய முடியும். ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலில் வெங்கடேச பெருமாளை நாங்கள் அவமதிக்கவில்லை. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். எனவே, கடவுளை அவமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.