எமது முன்னாள் மாணவர் ஒன்றிப் பொதுச்செயலாளர் தீபச்செல்வன் அவர்களின் எழுத்துப் பணிகளுக்கு துணையாக யாழ் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் உடன் நிற்கும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தயாபரன் லாஜிதர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் கடந்த 29ஆம் நாளன்று கிளிநொச்சியில் வெளியீடு கண்டது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் அவர்களின் தலைமையில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் வெளியீடு கண்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினராக IBC மற்றும் றீச்சா குழுமத்தினுடைய நிர்வாகியான திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, கிளிநொச்சி மாவட்ட உதவி திட்டமிடல் அதிகாரி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் அஜந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினுடைய தலைவர் பரமநாதப்பிள்ளை, மூத்த நாடக கலைஞர் ஏழுமலைப்பிள்ளை போன்றவர்களும் முன்னாள் போராளிகள், கலைஞர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுக்க தலைமை தாங்கிய யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி எஸ். ரகுராம் அவர்கள், தீபச்செல்வன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கதைகளை நினைவுகளை இலக்கியமாக பதிவு செய்யும் அரிய பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் இதற்காக அவர் பல நெருக்கடிகளை அச்சுறுத்தல்களை சந்தித்தபோதும் தனது பணியில் தன்னை உறுத்து ஈடுபடுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த சயனைட் நாவலானது கடந்த வருடம்(2024) மார்கழி மாதம் இந்தியா சென்னையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.