செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் நான் பேசும் ஆதிமொழி | பிரியங்கன் பாக்கியரெத்தினம்

நான் பேசும் ஆதிமொழி | பிரியங்கன் பாக்கியரெத்தினம்

0 minutes read

 

காலத்தின் விசித்திரங்களில் நான்
மோகித்திருக்கும்போது அவர்கள்
எங்களிடம் வந்தார்கள்

ஆதியூழியில் ஊர் தின்ற
கொடுநெருப்பின் நாக்குகளாய்
வார்த்தைகளை உதிர்த்தார்கள்

நான் பேசும் ஆதிமொழியில்
அவர்களின் உதடுகள் அசைந்து
ஆலகாலமும் அஞ்சி ஒடுங்கும்படி
பேசிக்கொண்டார்கள்

அழிவை எழுதும் ஆயுதங்கள்
தரித்திருந்த கைகள் மேலெழுந்து
என்னில் குறிவைத்துக்கொண்டது

விரும்பிய சொற்களைப்பொறுக்கி
வார்த்தைகளாக்கி வசைமொழியில்
என்னை கொன்றுவிடவே முயன்றார்கள்

நான் செய்த குற்றங்களென
அடுக்கடுக்காய் அவர்களின் வார்த்தைகளை
ஆரங்களாக்கி அணிவித்தார்கள் என் மீதில்

குவிந்துகொண்டே போன குற்றங்களை
மறுக்கும் கனங்களிலெல்லாம்
கருணைகள் ஒரேயடியாக வற்றிவிடப்போவதில்லை
என்ற சித்தாந்தம் தலைதெறிக்க ஓடி ஒழிந்துகொண்டது

மயிர்கூச்செரியும் தோல்களின் மீதில்
கீறல்களில் பிளிறிட்டு வெளிவந்தது
அம்மாவிடம் நான் குடித்த தாய்ப்பால்

என் நிலத்தையும்
நீண்டு வளர்ந்த பனங்கூடல்களையும்
மீன் பாடும் கடலையும் இன்னும்
பச்சை வயல்களையும்
காப்பவர்கள் தாங்களதான்
என்று என்னிடத்தில் அடிக்கடி
சொல்லியும் வைத்தார்கள்

சில நாட்கழித்து அவர்கள்
அவர்கள் போய்விட்டார்கள்
காவல் காக்கவென்று

என் நினைவுகளில் சுரந்தபடி
அவர்கள் ஏறிப்போனது
நான் வரைந்து வைத்த பாதையும்
அதன் சுவடுகளையும் மிதித்து
அழித்தபடி

ஆனால் நான் கைகால்கள்
கட்டப்பட்டபடி அந்த ஆற்றோர
படுக்கைகளில் கிடத்தப்பட்டிருகிறேன்
இப்போது என்னில் இரத்தம் பீறிடவில்லை
அது காய்ந்திருந்தது கண்கள் சொருகியிருந்தது
செங்குத்தாக

பிரியங்கன் பாக்கியரெத்தினம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More