“அநுர அரசு நியாயமாகச் செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடைப் படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்குக் கருத்துக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜே.வி.பி. அரசு ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இயக்கங்களுக்குத் தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாகச் சென்றனர்.
ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசிடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் வெலிக்கடைச் சிறையில் காடையர்கள் வெளியில் இருந்து உள்ளே அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூடத் தெரியாமல் இருக்கின்றது. ஆகவே, இந்த அரசு நியாயமாகச் செயற்படுமாக இருந்தால் வெலிக்கடைப் படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பட்டலந்த பிரச்சினை எல்லாவற்றையும் விட 1983 ஆம் ஆண்டு கலவரம் கூடுதலான இழப்புக்களைச் சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படுகொலை. இதை அரசு விசாரணைக்குக் கொண்டு வந்து, அதற்கான நீதி, நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.” – என்றார்.