மியான்மாரில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்றுத் திங்கட்கிழமை (31) தெரிவித்துள்ளது.
பாலர் வகுப்பறை இடிந்து விழுந்ததில் 50 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், ரமழானுக்காக மசூதிகளில் தொழுது கொண்டிருந்த எழுநூறு முஸ்லிம்கள் அங்கு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரின் காரணமாக மனிதாபிமான அமைப்புக்கள் செயல்படுவதற்கு உலகின் மிகவும் சவாலான இடங்களில் ஒன்றாக காணப்படும் மியன்மாரில், பசி மற்றும் நோய் பரவும் அபாயத்தை இந்த நிலநடுக்கம் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இது நகரின் விமான நிலையத்தை சேதப்படுத்தியது.
வீதிகள் உடைந்ததுடன், நாட்டின் மையத்தில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு தடை ஆகியவற்றால் நிவாரண முயற்சிகளும் தடைபட்டுள்ளன.
அங்கு காணப்படும் கனரக இயந்திரங்களின் பற்றாக்குறை, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தி உள்ளதுடன், 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மீட்புக் குழுவினர், உயிர் பிழைத்தவர்களைக் கையால் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.