கனடாவில் இன்று (28) பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.
இந்தத் தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என தேர்தலுக்கு முன்னதான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்வரை, லிபரல் கட்சியின் தலைவரும், கனடா பிரதமருமாக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், மார்க் கார்னி பிரதமரானதைத் தொடர்ந்து லிபரல் கட்சி மீண்டெழுந்துள்ளது போல் தெரிகிறது.
தொடர்புடைய செய்தி : டிரம்ப்பின் மிரட்டல்களை சமாளிக்க திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர்!
இந்நிலையில், முன்னதான கருத்துகணிப்புகள், தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளன.
ஆய்வமைப்பான Ipsos நிறுவனம் நேற்று மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேசிய அளவில் மக்களிடையே 42 சதவீத ஆதரவு பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 38 சதவீத ஆதரவும், ஜக்மீத் சிங்கின் நியூ டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 9 சதவீத ஆதரவும் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இன்றைய தேர்தல் நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பது சிறந்ததாக இருக்கும் என பொதுமக்களுக்கு தேர்தல் கனடா அறிவுறுத்தியுள்ளது.
அதிகபட்ச சன நெரிசல் காலை ஆரம்ப வேளையிலும் மாலை 4 மணிக்குப் பிறகும் காணப்படும் எனவும் தேர்தல் கனடா குறிப்பிட்டுள்ளது.