எரிவாயுசிலிண்டர் ஒன்றினை பெறுவதற்காக வந்திருந்த பெண்மணியொருவர் தனக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாதமையால் எரிவாயுசிலிண்டர் ஏற்றப்பட்ட லொறியின்குறுக்கே அமர்ந்து அதனை செல்லவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று வாதுவ பொதுபிட்டியவில் இடம்பெற்றது.
ஒரு சிலிண்டரையாவது கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என தெரிவித்து அந்த பெண் லொறியின் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த பகுதியில் சமையல் எரிவாயுவிற்காக வந்த பலர் காணப்பட்டனர்.
1.30 மணியளவில் லொறியொன்று சமையல் எரிவாயுசிலிண்டர்களுடன் அந்த பகுதிக்கு வந்தது.
எனினும் முகவர்களிற்கு போதியளவு சமையல் எரிவாயு வழங்கப்படாமையால் அந்த பெண்ணால் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய லொறியின் முன்னால் அமர்ந்துகொண்டார், எனக்கு சமையல் எரிவாயுவினை வழங்காவிட்டால் லொறியை என்மீது செலுத்தி;த்தான் கொண்டு செல்லவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக அந்த பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து லொறியை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்,
பின்னர் ஒரு சிலிண்டர் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை தொடர்ந்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.