செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுதந்திர தினத் கொண்டாட்டத்துக்கு ரணில் விசித்திரமான விளக்கம்!

சுதந்திர தினத் கொண்டாட்டத்துக்கு ரணில் விசித்திரமான விளக்கம்!

1 minutes read

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டாடுவதற்கு அரசு பெரும் தொகைப் பணத்தைச் செலவிட்டு வருவது குறித்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் நிலையில் கொண்டாட்டம் ஏன் அவசியம் என்று விளக்கம் கொடுத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

சுதந்திர தினத்தைக் கூடக் கொண்டாட முடியாதவர்கள் இவர்கள் என்று ஏனைய நாடுகள் இலங்கையை நினைத்துவிடக்கூடாது என்பதால் அதனைக் கொண்டாட வேண்டியிருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

“75ஆவது சுதந்திர தினத்தை நாம் கட்டாயம் கொண்டாட வேண்டும். இல்லையென்றால் சுதந்திர தினத்தைக்கூட கொண்டாட முடியாதவர்கள் என்று உலகம் எம்மைப் பார்த்துக் கூறும். அதேபோன்று சுற்றுலாவிகளையும் முதலீட்டாளர்களையும் நாம் கவர்ந்திழுக்கவேண்டும். எமது நாடு குறித்த சாதகமான விம்பத்தை நாம் கட்டியெழுப்பவேண்டும். அதனால் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்” என்றார் ஜனாதிபதி.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிறப்பு நிகழ்வுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தலதா மாளிகையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரித் ஓதும் நிகழ்வுகள், ஏனைய மத வழிபாட்டிடங்களில் சிறப்பு வழிபாடுகள், சுதந்திர சதுக்கத்தில் பண்பாட்டு நிகழ்வுகள், காலிமுகத்திடலில் பாரம்பரியமான அணிவகுப்புகளுடன் கூடிய முதன்மை நிகழ்வுகள், பொதுப்பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிச் சாலைகளை மக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறந்துவிடல், யாழ்ப்பாணத்தில் இந்தியாவால் அமைக்கப்பட்ட பண்பாட்டு மண்டபத்தைத் திறத்தல், தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான சைக்கிள் பயணம் என்பன திட்டமிடப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகளுள் சிலவாகும்.

இந்த அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நடப்பதை உறுதிப்படுத்துவது அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த ஜனாதிபதி, செலவுகள் குறித்து மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் முடிந்த வரையில் இந்த நிகழ்வுகளுக்கான செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, பாதுகாப்பு, வெளிவிவகாரம், கல்வி, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள், வெகுசன ஊடகம், நிதி ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More