புல்மோட்டை பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் சவர அலகினால் கழுத்து அறுக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற பாடசாலையில் ஜி.சீ.ஈ. உயர்தரம் கற்கும் மாணவன் இந்தப் பாடசாலையில் சாதாரண தரத்தில் கற்கும் இன்னுமொரு மாணவனைத் தாக்கிக் கழுத்தை அறுத்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் உடனடியாக பிரதேசத்தில் இருந்து தப்பியோடிவிட்டார் என்றும், இந்தத் தாக்குதலுக்குக் காதல் விவகாரமே காரணம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் வகுப்பு சக பாடிகள் கூறினர்.
படுகாயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.