வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது என மருத்துவ ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் எடையை குறைப்பதற்கும் நடைப்பயிற்சி உதவுகிறது. 20 நிமிடங்களில் 1,500 மீட்டர் தூரம் நடந்தால்கூட சுமார் 100 கலோரி எரிக்கப்படுகிறது. வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வழியில்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர்களுக்கும் நடைப்பயிற்சிதான், எளிமையான பயிற்சி.
நம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு நடைப்பயிற்சி உதவுகிறது. இதனை செய்யும்போது உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இறுக்கமாகின்றன. நடைப்பயிற்சிைய ஆரம்பிக்கும்போது வலி எடுப்பது இயல்புதான். போகப் போக இந்த வலி குறைந்துவிடும்.
இடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையை குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சியைவிட எளிதான உடற்பயிற்சி எதுவுமில்லை. எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும்.
ஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பாக நடந்தால் ஆயுளில் மூன்று ஆண்டுகள் கூடுகிறது. முறையாக நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. நடைப்பயிற்சியால் மூட்டுவலி தொல்லை 25 சதவீதம் குறைகிறது. முதுமை காலத்தில் ஆஸ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சியைவிட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை. எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு நடைப்பயிற்சி செய்தாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் நடை பயிற்சி மூலம் குறைக்கலாம்.