வாஷிங்டன் : எச்-1பி விசா வழங்குவதற்கென குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்பை செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் குறைந்தபட்ச அளவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நிர்ணயித்தது. அமெரிக்கர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்பின் உத்தரவால் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கைகளில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த புதிய விதிமுறை வருகிற மே 14ம் தேதி செயல்படுத்தப்போவதாக இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க தொழிலாளர் நலத்துறைக்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய நிர்ணய விதிகளை செயல்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் எனவும் ஆணையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியத்திற்கு வரம்புகளை நிர்ணயித்தால் உலகின் திறமை மிக்கவர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது பாதிக்கப்படும் என்று ஜோ பிடன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.