புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களைசெயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரை கேளுங்கள் எனும் வளம் சார்ந்த அபிவிருத்திக் கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குள்ள கட்டமைப்புகள் மூலமான நடவடிக்கை மேற்கொளள்ளப்படுமென்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, புலம்பெர் தமிழ் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டிருப்பதுடன் புலம்பெயர் முதலீடுகளை வரவேற்றிருக்கின்றார்.
புலம்பெயர் மக்களை இணைத்துக் கொண்டு பயணிப்பது எமது மக்களை பலப்படுத்தும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றேன். அதுமாத்திரமன்றி, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றிலும் ஜனாதிபதியின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் இவ்வாறான கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதுடன் அவற்றை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களும் உற்சாகப்படுத்தல்களும் தமிழர் தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.