செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அசகாய சூரன் | முல்லையின் ஹர்வி

அசகாய சூரன் | முல்லையின் ஹர்வி

1 minutes read

எனக் கொரு பூச்சியை
நினைவிருக்கு
உங்களுக்கும் இருக்கும்

ஆமணக்கு இலையும் அதன் குச்சியிலும்
கை நீளக் கிடங்கு கிண்டி பொறிக் கிடங்கு வைக்கும்
மணல் மேட்டு குவியலில் அதைக் கண்டேன்

கரிச் சட்டி நிறம்
கடுகளவில் கண்ணு
ஒன்றை ஒன்று முட்டாத செட்டைகள்
என் கை முடியளவு கால்கள்
நிலத்து மண் பொந்தில் வாழும்,
நீளாத இரு கொம்புகள்

வளைவு நெளிவற்ற
மாட்டுச் சாணி உருண்டை
கல்லும் புல்லும் அதில் பக்குவமாய் படிந்திருக்க
பின்னங் காலிரண்டால் தள்ளி
நீண்ட வழிப் பயணமாய்
வந்து கொண்டிருந்தது

வழி மறிக்க என் கையில்
ஆமணக்கு குச்சி

எங்கே போகிறாய்??
அதனிடம் கேட்க நினைத்த
என் நீண்ட நாள் கேள்வி

எனக்கு செவி சாய்க்கவில்லை அது,
உருண்டை மேலேறி வேறு திசை திரும்பியது
நில்… நில்…!!
அந்த பொட்டல உருண்டையை
தள்ளி என் கிடங்கருகில் விட்டேன்

என் மேலது சினத்துக் கொள்ளவில்லை
உருண்டையை எடுத்து
மீண்டும் தள்ளியது

மீண்டும் செய்தேன்
இன்னொரு முறையும் கூட…
தன் உருண்டையிலே அதன்
முழுக் கவனமும்

சற்றுக் கனத்தேன்
மூச்சையும் மேவியும் விட்டேன்
வியர்வை சூடாகியது
கைக்குச்சி உடைந்து விழுந்தது
பல்லை இறுக கடித்து
காலால் அதை கிடங்குள்
தள்ளி மண்ணால் முழுவதுமாய் மூடிவிட்டு
வீட்டுக்கு புறப்பட்டு விட்டேன்

கனவெல்லாம் அதன் நினைவுகள்
இரைந்து கொண்டிருக்க
விடிய முன் மறுகவும் பார்க்க ஓடி
மண்ணுள் கிளறினேன்
எங்கும் இல்லை அது

களைத்துப் போய் மணலிலே சாய்ந்து
படுத்து திரும்பிப் பார்த்தேன்
தூரத்தில் கருமையாய்
ஒரு உருண்டையின் வழிப் பயணம்
தொடர்ந்து கொண்டிருந்தது.

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More