அமெரிக்கர்களில் சுமார் பாதிப் பேர் தங்கள் உணவு மற்றும் பானப் பழக்கத்தை விலையேற்றத்தால் மாற்றிக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 40 ஆண்டு காணாத பணவீக்கம், உணவுப் பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் உணவுப் பொருள் விலை ஒன்றே கால் வீதம் கூடியது. ஆண்டு அடிப்படையில் அந்த எண்ணிக்கை 10 வீதத்துக்கும் மேல்.
பகுதி நேரமாக உணவகத்தில் பணிபுரிபவர்களுக்கு சிலர் சிறு அன்பளிப்புத் தொகை வழங்குவதுண்டு. ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையக் குறைய அன்பளிப்பும் குறைகிறது.
அமெரிக்கர்கள் சிலர் உணவு வங்கிகளை நாடி வருகின்றனர். இலவச உணவு வழங்கும் அத்தகைய அமைப்புகளால், முன்னர் போல் உதவி செய்ய முடியவில்லை.
உணவுப் பொருள் விலையும் கூடி, உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கையும் கூடிவிட்டதால் அத்தகைய அமைப்புகள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
பணவீக்கத்தைக் குறைக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துவரும் வேளையில், நாடு மந்தநிலைக்குச் சென்றுவிடும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.