Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் விடுதலை!

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் விடுதலை!

1 minutes read

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்று வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்கள் ஆகியோரின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் எம்.திவாகரன், அப்போதைய செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு தவணைகளின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்று வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

இருவர் சார்பிலும் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More