ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். வேலுகுமார் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளியாகும் தகவல்களை இன்று அவர் நிராகரித்தார்.
“மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கான அரசியலையே, மனச்சாட்சியின் பிரகாரம் இதுவரை நான் முன்னெடுத்து வந்தேன். இனியும் அதே வழியில்தான் என் பயணம் தொடரும்” – என்றும் வேலுகுமார் எம்.பி. கூறினார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்றது. இதன்போது வேலுகுமார் எம்.பி. நடுநிலை வகித்தார்.
தன்னிச்சையான முடிவுகளை எடுத்து , தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி மக்கள் வழிக்க வர வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்தார் என்று வேலுகுமார் எம்.பி. விளக்கமளித்தார்.
எனினும், வேலுகுமாரின் நிலைப்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பலகோணங்களில் கருத்துக்கள் உலாவின. ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்லப் போகின்றார் எனவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணையவுள்ளார் எனவும், இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே, அந்தத் தகவல்களை வேலுகுமார் எம்.பி. இன்று மறுத்தார்.
அத்துடன், நடுநிலை தொடர்பான தனது நிலைப்பாட்டை திரிபுபடுத்தி, ராஜபக்ச ஆதரவு, ரணில் ஆதரவு, அரசுக்கான ஆதரவு என முத்திரை குத்தி, வதந்திகளைப் பரப்பி, அரசியல் சேறுபூசும் பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும், தங்கள் தவறை மூடிமறைப்பதற்காக இப்படியான அநாகரிக அரசியலைச் சிலர் முன்னெடுக்கின்றனர் எனவும் வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.