“அரசமைப்புப் பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல.”
– இவ்வாறு அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் விமல் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர், எதிர்க்கட்சி, தரப்பில் தவிர்க்கப்பட்டமை இனப்புறக்கணிப்பு என்ற அடிப்படையில் – சிங்களவர்களின் பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் கருத்து வெளியிட்டது என்று தெரிவித்தே, உதய கம்மன்பில எம்.பி. தனது கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கான வாக்கெடுப்பின் போது அதனைத் தவிர்த்தது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசமைப்புப் பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்தப் பேரவையையும் அதிகாரப் பரவலாக்கல் விடயத்துக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்காகவே, சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதற்கு எதிராக எனது பெயரைப் பரிந்துரைத்தது” – என்றார்.