விக்டோரியாவில் இந்த வருடம் சுமார் இரண்டரை லட்சம் கங்காருகளை சுட்டுக்கொலை செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. பெருகிவரும் கட்டாக்காலி கங்காருகளினால் பொதுமக்களுக்கும் பண்ணை நிலங்களுக்கும் கடும் இடையூறுகள் ஏற்படுவதால், மாநிலத்திலுள்ள கங்காருவின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதவீதத்திற்கு குறைவான கங்காருகளைக் கொலை செய்யும் வழக்கமான திட்டத்தை, ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் செயற்படுத்திவருவது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மெல்பேர்ன் மாநகர் அமைந்துள்ள விக்டோரியாவில் இரண்டரை லட்சம் கங்காருகள் படுகொலை செய்யப்பட்வுள்ளன.
போன வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், அதற்குரிய தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில், கங்காருகளின் குழப்படியும் அதிகரித்துவிட்டது என்று விக்டோரிய அரசு காரணம் கூறியிக்கிறது.
பெருந்தொகையான கங்காருகளைச் சுட்டுக்கொல்வதற்கு அரசாங்கம் ஒரு பக்கம் நடவடிக்கையெடுத்துவரும்வேளை, தங்கள் பண்ணகள் மற்றும் வாழிடங்களுக்குள் நுழையும் கங்காருகளைச் சுடுவதற்கு பொதுமக்களுக்கும் – நிபந்தனைகளுடன் – அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. எத்தனை செங்கங்காருகளைச் சுடலாம், எத்தனை குட்டிக்கங்காருகளைச் சுடலாம் என்ற கட்டுப்பாடுகளுடன், பண்ணைகளின் பரப்பளவுக்கு ஏற்ப, கொலை செய்யக்கூடிய கங்காருகளின் எண்ணிக்கையையும் நேர்த்தியாக பரிந்துரை செய்திருக்கிறது அரசு.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், கடந்த வருடம் சில மாதங்களாக, கங்காருகளை இவ்வாறு கொலை செய்யும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அந்த மாநில அரசின் துப்பாக்கிதாரிகளினால் கங்காருகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமொன்றை, பொதுமகன் ஒருவர் நேரில் கண்ட காரணத்தால், வருடாந்த கங்காரு களையெடுப்பு இடைநிறுத்தப்பட்டது.
கங்காருகள் கொலை செய்யப்படுகின்ற Culling எனப்படுகின்ற இந்த நடவடிக்கை, பொதுமக்கள் வாழிடங்களிலிருந்து தூரமாக – யாரும் காணாதவாறு – பின்னிரவில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு – கங்காருகளே அறியாத வண்ணம் – வேலிகளைப் போட்டு அடைத்து, பின்னிரவில் தாழப்பறக்கும் ஹெலிக்கொப்டர்களில் சென்று லேஸர் துப்பாக்கிகளால், பல்லாயிரக்கணக்கான கங்காருகள் இவ்வாறு கொல்லப்படுவதை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.
சுமார் ஐம்பது கோடி கங்காருங்கள் வாழும் ஆஸ்திரேலியாவில், கடந்த 20 வருடங்களில் சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட கங்காருங்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு, மக்களினதும் பண்ணைகளதும் பாதுகாப்பினை உறுதி செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.
ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் பிரதிநிதிகள், இந்தக் கங்காரு களையெடுப்பு குறித்து கூறும்போது – “எங்கள் தேசத்தின் அடையாளங்களையும் அதன் உயர் படைப்புக்களையும் அழித்தொழித்து, எங்களின் ஆன்மாவை வருத்துகின்ற தொடர் ஆக்கிரமிப்பை நாங்கள் வெறுக்கிறோம்” – என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் இயற்கையை வழிபடுபவர்கள். அவர்களின் வாழ்வில் நிகழும் அனைத்துக்கும் இயற்கையே காரணம் என்று அதனைப் போற்றுபவர்கள். இந்த நிலத்தின் விலங்குகள், காடுகள் உட்பட அனைத்தும் இயற்கையின் படைப்புக்கள் என்று அவற்றைத் தங்கள் உறவுகளாக மதிப்பவர்கள்.
ஆனால், கங்காருகள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான அரசு அறிவிப்பில் – தாங்கள் இயன்றளவு கங்காருகளை மனிதாபிமானத்துடன் – அதிக வலியின்றி – கொலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகைளயும் மேற்கொள்வதாகவும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்கள்.
ப. தெய்வீகன்