செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யார் தவறிழைத்தார்கள்? – கண்டறிய வேண்டும் என்கிறார் ரணில்

யார் தவறிழைத்தார்கள்? – கண்டறிய வேண்டும் என்கிறார் ரணில்

2 minutes read

“உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு இராணுவத்தினர் எதிர்ப்பில்லை. இதனை இராணுவத்தளபதியே என்னிடம் கூறினார். யார் தவறிழைத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அவர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30 – 40 வருடங்களுக்கு மேலாக போர், மோதல்கள், குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத வங்குரோத்து அரசியல்களால் நாடு பிரிந்திருந்தது. நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும்.

தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதைக் கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி, சர்க்கரை என்பவற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன்.

நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் தெரியப்படுத்த வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கிறேன்.

இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழு அமைப்பு

பல பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம். காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையைக் கண்டறிவதை நாமும் விரும்புகிறோம். அதன் மூலம் எம் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள். எனவே, உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மாற்றம்

அதேபோன்று பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டு வர இருக்கின்றோம். வடக்கு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டு வரத் தயாராவதாகச் சிலர் கூறுகின்றனர். நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கின்றோம். கடந்த வருடம் இதனைத் தெற்குக்குப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More