இராப் பகல் உழுது விதைக்க,
மேனி மேவும் சகதிச் சேறு தான்
உழவனுக்கு அலங்காரம்.!!!
அடுக்கு மாடிக் கட்டிங்களுக்காக
குழைத்து பிரட்டும் சுண்ணாம்புக் கலவைதான்
கொத்தனுக்கு அலங்காரம் !!!
பனையேறிப் பதனீர் வடிக்க,
கைவழியே தாவிப் படரும் கள்ளுத்தான்
எடுப்பவனுக்கு அலங்காரம்.!!!
கரவலையில் மீன் பிரித்து,
செதில் படரும் முக அழகுதான்
மீனவர்க்கு அலங்காரம்.
விதவிதமாய் ஆக்கிப் போட
வெந்த விறகூதும் கண்மணிகளின் சாம்பல் கரி தான்
அவர்களின் அலங்காரம்.
தலையறுத்து மாமிசத்தின் இரத்தத்தின்
நடுவில் விலை பேசும் கசாப்புக்காரனுக்கு
குருதி தோய்ந்த அழுக்காடைதான்
அலங்காரம்.
வீதியை மாற்ற, கொதி தழலாய் ஊற்றும்
தார் வெக்கை தானே
கூலித்தொழிலாளிக்கு அலங்காரம் ??
இத்தனை அழகுண்டாயினும்
ஆள் அறியா முகம் மறைக்க
மாற்றும் பூச்சுகளும்
அலங்காரங்களும் ஏன்?
உழைக்கும் பணமெல்லாம்
வெறும் ஒப்பனையில்
கரைக்கிறது இன்று !!!!
பெண்டீரும் ஆடவரும்
அலங்காரம் கொள்வதற்கே
அதிக ஆசைப் கொள்வது தகுமோ ??
முல்லையின் ஹர்வி