20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பீபா உலகக் கிண்ண சுற்றுப்போட்டியின் அணிகளை குழுநிலைப்படுத்துவதற்கான குலுக்கல் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது தொடர்பான சர்ச்சையே இதற்குக் காரணம்.
இருபது வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே, ஜூன் மாதங்களில் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ளது. இச்சுற்றுப்போட்டிக்கு இஸ்ரேலும் முதல் தடவையாக தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டிகளுக்காக அணிகளைக் குழுநிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வு இந்தோனேஷியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெறவிருந்தது.
ஆனால், இப்போட்டிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேற்ற வேண்டும் என பாலி மாகாண ஆளுநர் வயான் கோஸ்ட்டர் வலியுறுத்தினார். இதையடுத்து இக்குலுக்கள் நிகழ்வை ஒத்திவைப்பதாக பீபா அறிவித்துள்ளது.
உலகில் மிக அதிக எண்ணிக்கையான முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேஷியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் எதுவும் இல்லை. பலஸ்தீன விவகாரமே இதற்குக் காரணம்.
ஒத்திவைப்புக்கான உத்தியோகபூர்வ காரணத்தை பீபா உடனடியாக அறிவிக்கவில்லை. இதற்கான புதிய திகதியையும் அறிவிக்கவில்லை.
ஆனால், பலஸ்தீனியர்கள் தொடர்பான இஸ்ரேலின் கொள்கைகள் காரணமாக இஸ்ரேல் இப்போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்க வேண்டும் என இந்தோனேஷிய விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பாலி ஆளுநர் கடிதம் எழுதியமையே இதற்கான காரணமாக இருக்கலாம் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.