தாய்லாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையிலுள்ள தா லிம்ஜரோன்ராத்தை எம்.பி பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு சிபாரிசு
தாய்லாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ள பிட்டா லிம்ஜரோன்ரெட்டை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. தேர்தல் பிரச்சார விதிகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டு விசாரணையையடுத்து இவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிருந்து ஜெனரல் பிரயுக் சான் ஓ சா பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
500 ஆசனங்களைக் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மே 14 ஆம் திகதி நடைபெற்றது.
இத்தேர்தலில் 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான மற்போக்கு முன்னேற்றக் கட்சி (எம்.ஈ.பி.) 151 ஆசனங்களைப் பெற்றது.
முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவாத்ராவின் மகளான பேதோங்தான் ஷினவாத்ரா தலைமையிலான ப்வே தாய் கட்சி 141 ஆனங்களைப் பெற்றது. பூமி தாய் கட்சி 70 ஆசனங்களையும்,
பிரதமர் பிரயுத் சான் ஓ-சா தலைமையிலான யூடிஎன் கட்சி 36 ஆசனங்களையும் பெற்றன,
இதையடுத்து, ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் மூவ் போர்வார்ட் கட்சி ஈடுபட்டிருந்தது. அதன் தலைவர் பிதா லிம்ஜரோன்ராத் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அரசியலிலிருந்து தான் ஓய்வு பெறுவதாகவும், புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக பதவி வகிப்பதாகவும் பிரயுக் சான் ஓ சா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
அதேவேளை, தேர்தல் பிரச்சார விதிகளை பீதா லிம்ஜரோன்ராத் மீறினாரா என்பது தொடர்பாக தாய்லாந்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை நடத்தியது.
இவ்விசாரணை முடிவில், பீதா லிம்ஜரோன்ராத்தை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்கு சிபாரிசு செய்துள்ளது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் இதிபோர்ன் பூன்பிராகோங் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு தாய்லாந்து பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.