‘கணீர் குரலோன்’ அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் நடிகை சிவாத்மிகா ராஜசேகர், அபிராமி, நடிகர்கள் காளி வெங்கட், நாசர், ரமேஷ் திலக், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி. எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
கொமர்ஷல் அம்சங்கள் கலந்த பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”இந்தத் திரைப்படம் சக மனிதர்களை பற்றியதாக இருக்கும். இதனுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படைப்பாகவும் இருக்கும். இதில் நடிக்கவிருக்கும் கலைஞர்கள் அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படமாகவும் அமையும்” என்றார்.