வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டுபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது மேற்கு வங்க மாநில அரசு நடத்தும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் பங்கேற்க வேண்டும் என மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜியின் பதிவொன்றில், “டுபாய் சர்வதேச விமான நிலையக் காத்திருப்பு பகுதியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னைப் பார்த்தார். தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுத்தார். அப்போது வரும் நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தேன். இலங்கைக்கு வருகை தர வேண்டும் என ரணில் எனக்கு அழைப்பு விடுத்தார்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.