தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டைக் கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கடந்த 20 வருட காலமாக நான் முயற்சித்து வருகின்றேன். இந்த அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல பேச்சுகளிலும் நான் கலந்துகொண்டேன். ஆனால், அந்தப் பேச்சுகளில் எந்தச் சாதகமான முடிவும் எட்டப்படவில்லை.
தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி உண்மையான நிலைமையை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன். அதற்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன்.
அதன்மூலம் இதற்கு ஒரு சாதகமான முடிவை எடுக்க முடியும். எல்லை தாண்டும் பிரச்சினை, இலங்கையில் மாத்திரமல்ல, இது ஏனைய உலக நாடுகளிலும் காணப்படுகின்றது. இரு நாடுகளின் பிரச்சினையை இரு நாடுகளுனான பேச்சு மூலமே தீர்க்க முடியும்.” – என்றார்.