இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2வது விமானம் தாங்கி போர்க்கப்பல்
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக் கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.