அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலைச் சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை 14 நாள்களுக்கு இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்காலக் குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது.